'இந்தியாவும், சீனாவும் நல்லுறவை பேணினால், இரு நாடுகளுக்கும் நல்லது' - சீன ராணுவ மந்திரி


இந்தியாவும், சீனாவும் நல்லுறவை பேணினால், இரு நாடுகளுக்கும் நல்லது - சீன ராணுவ மந்திரி
x

இந்தியாவும், சீனாவும் நல்லுறவை பேணினால், இரு நாடுகளின் நலன்களும் பூர்த்தியாகும் என்று சீன ராணுவ மந்திரி வெய் பெங்கே கூறினார்.

சிங்கப்பூர்,

இந்தியா, சீனா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு, மே மாதம் 5-ந் தேதி முதல் கிழக்கு லடாக்கில், அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியாவுடனான எல்லை பகுதியில் சீனா தொடர்ந்து சாலைகள் அமைப்பது, பாலம் கட்டுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.

2020-ம் ஆண்டின் ஜூன் மாதம் 15-ந் தேதி லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படையினர் கொடூரமான ஆயுதங்களுடன் வந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இதில் சீன தரப்பிலும் பெருத்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் தளபதிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

அதன் பலனாக பாங்காங் ஏரி மற்றும் கோக்ரா பகுதியில் இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொண்டன. தொடர் பேச்சுவார்த்தை நீடித்தாலும்கூட இரு தரப்பும் அங்கு தலா 60 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்திருப்பதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் நேற்று நடந்த 'ஷாங்கிரி லா பேச்சு வார்த்தை' உச்சி மாநாட்டில் சீன ராணுவ மந்திரி வெய் பெங்கே கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் இந்தியாவுடனான எல்லை பிரச்சினை பற்றி அமெரிக்க சிந்தனையாளர் பேரவையான புரூக்கிங்ஸ் அமைப்பின் இயக்குனர் டாக்டர் தான்வி மதன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து சீன ராணுவ மந்திரி வெய் பெங்கே கூறியதாவது:-

சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகள். இரு தரப்பிலும் நல்லுறவை பராமரித்து வந்தால் அது இரு நாடுகளின் நலன்களையும் பூர்த்தி செய்யும். அதற்குத்தான் நாங்கள் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இந்தியாவுடன் தளபதிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சு வார்த்தை நடத்தி உள்ளோம். எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.


Next Story