முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பர்க்


முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டா: ரூ.25 ஆயிரம் கோடியை இழந்த மார்க் ஜுக்கர்பர்க்
x
தினத்தந்தி 6 March 2024 8:40 AM GMT (Updated: 6 March 2024 9:23 AM GMT)

தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன.

வாஷிங்டன்,

2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.

தற்போது மெட்டா எனும் நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். நேற்று உலகெங்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டு சமூக வலைதளங்களும் முடங்கின.

இதனால், அவற்றை பயன்படுத்தும் பயனர்கள், கருத்து பரிமாற்றம் மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் உள்ளிட்ட அதன் அனைத்து சேவைகளையும் பெற முடியாமல் தவித்தனர்.

சில மணி நேரங்கள் கடந்ததும் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. இந்நிலையில், இன்று அமெரிக்க பங்கு சந்தையில், மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்தது.

இதனால் மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜுக்கர்பர்க் ரூ.25 ஆயிரம் கோடி (3 பில்லியன்) இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.


Next Story