குரங்கு அம்மை பாதிப்பு: காங்கோ-9, நைஜீரியாவில் முதல் பலி


குரங்கு அம்மை பாதிப்பு:  காங்கோ-9, நைஜீரியாவில் முதல் பலி
x

காங்கோ வன பகுதியில் இறந்த குரங்கு, வவ்வால், எலிகளை எடுத்து வந்து உணவாக சாப்பிட்டதில் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளது.

நைஜர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல வெளிநாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. காங்கோவில் 9 பேர் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவு தலைவரான டாக்டர் அய்மி அலங்கோ கூறும்போது, நாட்டில் 465 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காங்கோவின் நிலை மோசமடைந்து உள்ளது.

காங்கோவில் வசிப்போர் வன பகுதிக்கு சென்று இறந்த குரங்கு, வவ்வால் மற்றும் எலிகளின் உடல்களை எடுத்து வந்து உணவாக சாப்பிட்டதில் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளது என அலங்கோ கூறியுள்ளார்.

குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று மற்றொரு ஆப்பிரிக்க நாடான, நைஜீரியாவில் சந்தேகத்திற்குரிய வகையிலான 66 பேரில் 21 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானது. அவர்களில் ஒரு நோயாளி மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழந்து உள்ளார்.

40 வயது கொண்ட அவருக்கு இணை நோய்களும் இருந்தன என அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. அந்நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து குரங்கு அம்மை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனினும், 36 மாகாணங்களில் 22 மாகாணங்களில் 247 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


Next Story