உக்ரைன் போருக்கு பின் ரஷியாவில் நிலவும் சூழல் என்ன? ரஷியர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் கருத்துக்கணிப்பு

ரஷியாவில் மக்களின் கருத்துக்களை மதிப்பிடுவது என்பது கடினமான பணியாகும்.
மாஸ்கோ,
ரஷியாவின் ஒரே சுதந்திரமான கருத்துக் கணிப்பாளரான லெவாடா மையத்தின் ஆய்வு, நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதில் 81% ரஷியர்கள் வெளிநாட்டு உணவு நடவடிக்கைகளை தங்கள் நாடு உள்நாட்டு மாற்று சக்திகளால் மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் காரனமாக வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷியாவை கைவிட்டன. அங்கு செயல்பட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் புலம்பெயர்ந்தன.
பொருளாதாரத் தடைகளால் வாகனத் தொழில், உதிரிபாகங்களின் விநியோகம் நசுக்கப்பட்டது.சர்வதேச நிறுவனங்களுக்கு பதிலாக, உள்நாட்டு நிறுவனங்கள் அவர்கள் விட்டுச்சென்ற இடங்களை நிரப்பி வருகின்றன.
ரஷிய நாணயமான ரூபிள் டாலருக்கு நிகரான மதிப்பில் சரிவை சந்தித்தது. பின் அதன் மதிப்பு உயர தொடங்கியுள்ளது. எனினும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு இது ஒரு சுமையாகும், அதன் தயாரிப்புகள் அதிக விலை கொண்டவை.
மே மாதத்தில் கார் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை காட்டிலும் 97% குறைந்துள்ளது. ரஷியாவின் கப்பல் கட்டும் தளங்களும் விநியோக பற்றாக்குறையை எதிர்கொள்வதாக புதின் சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.
41% ரஷியர்கள் மட்டுமே உள்ளூர் தொழில்கள், மின்னணு பொருட்களை முழுமையாக மாற்ற முடியும் என்று நினைக்கிறார்கள்.
மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே உள்நாட்டு கார் உற்பத்தியால், இறக்குமதி இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.
ஒருபுறம் புள்ளிவிவரங்கள் சிலவற்றை கூறினாலும், ரஷியாவின் பொருளாதார வாய்ப்புகள் அந்த அளவுக்கு தெளிவாக இல்லை. கணிப்புகளுக்கு மாறாக, வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது.
ஆனால், உக்ரைன் போர் ஆரம்பித்ததில் இருந்து உள்நாட்டு உற்பத்தி (ஜி டி பி) 4% குறைந்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் ஜிடிபி கிட்டத்தட்ட 8% சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் இந்த ஆண்டு 15%ஆக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ரஷியாவின் சூழல் முன்பு இருந்தது போல் இனி இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும் என்று ரஷியாவின் மத்திய வங்கியின் தலைவர் எல்விரா நபியுல்லினா எச்சரித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் முதலீட்டாளர்களுக்கு அவர் எச்சரித்துள்ளார்.
ரஷிய மக்களிடம் தாக்கம்:
ரஷிய மக்களிடம் பொருளாதார தடைகள் தாக்கத்தை பெருமளவில் ஏற்படுத்தாதது பற்றி நிகோலாய் பெட்ரோவ்(சேத்தம் ஹவுஸ் - ரஷியா மற்றும் யூரேசியா திட்டத்தின் மூத்த ஆராய்ச்சியாளர்) விவரிக்கிறார்.
இதற்கு அவர்களின் வாழ்வியல் முறை ஒரு காரணமாகும். உலகில் என்ன நடக்கிறது என்பதை அதிகம் கவனிக்கவில்லை. அண்டை நாடுகளுடனான விவகாரங்களை கூட ரஷியர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பெரும்பாலும் ரஷியர்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை விரும்புகின்றனர். இது வழக்கமான ஒன்று.தற்போதையை நிலவரத்தில், ரஷியர்களின் பிரியப்பட்ட இடமான இத்தாலிக்கு அவர்களால் செல்ல முடியவில்லை.
இதனால் மாற்று இடமாக, சகலின் தீவு போன்ற கவர்ச்சியான உள்நாட்டு சுற்றுலா தளங்களை ரஷியர்கள் கண்டறிந்துள்ளனர். சகலின் தீவில் சுற்றுலா 25% உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பால்டிக் கடல் கடற்கரைகள் பகுதிகளுக்கும் மக்களின் வரத்து அதிகரித்துள்ளது.
இருப்பினும், ரஷியாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியாவிற்கு சுற்றுலா வழக்கத்தை விட 40% குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவிற்கு விமானப் பயணம் மீதான தடைகள் ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா வர்த்தகத்தின் பெரும்பகுதி சரிந்துள்ளது. மைக்கேல் சுகோருகோவ் என்ற நபர், ரஷியாவுக்கு வரும் வெளிநாட்டினர் சார்ந்த சுற்றுலாத்துறையை சார்ந்து தொழில் செய்பவர். ஆனால், அவர் இதனால் தனக்கு கவலை ஏதுமில்லை என்று கடந்து போகிறார்.
ரஷியாவில் வெளிநாட்டு செய்தி சேனல்கள் உட்பட பேஸ்புக், டுவிட்டருக்கும் தடை இருப்பதாக தெரிகிறது. இதனால் மக்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்களில் அதிலும் அரசின் "வெஸ்டி நெடெலி" சேனலில் வரும் தகவலை தான் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
இருப்பினும், விபிஎன் பயன்படுத்தி சில வெளிநாட்டு செய்தி சேனல்கள் மூலம் தகவலை அறிவதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் பெரும்பாலான மக்கள் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறும் செய்திகளை தாங்கள் முழுவதுமாக நம்பவில்லை, அதிலும் குறிப்பாக உக்ரைன் தொடர்பான தவறான செய்திகளை நம்பவில்லை என்கின்றனர்.
இந்த மாதம் லெவாடா நடத்திய கருத்துக்கணிப்பில், 65% ரஷியர்கள் உக்ரைனைப் பற்றி அரசு ஊடகங்களில் பார்க்கும் சில அல்லது அனைத்தையும் நம்பவில்லை என கண்டறிந்துள்ளது.
ரஷியாவில் நிலவும் அடக்குமுறை சூழலில், மக்களின் கருத்துக்களை மதிப்பிடுவது என்பது லெவாடா போன்ற சர்வதேச அளவில் மதிக்கப்படும் கருத்துக் கணிப்பாளரால் கூட கடினமான பணியாகும்.
எனினும், லெவாடா நடத்திய வாக்கெடுப்பில் 75% ரஷியர்கள் உக்ரைன் மீதான புதினின் இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கின்றனர்.
ஆனால் பாதிக்கும் குறைவானவர்கள் மட்டுமே ரஷிய படைகளின் நடவடிக்கைகளுக்கு எவ்வித நிபந்தனையின்றி ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஆனால், பெரும்பாலான மக்கள் தங்களுக்கு பின்விளைவுகள் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர் அதனால் தங்கள் நாட்டின் இராணுவத்திற்கு ஆதரவை தெரிவித்தனர் என்று லெவாடா இயக்குனர் டெனிஸ் வோல்கோவ் தெரிவித்தார்.