அமெரிக்கா, தென் கொரியாவுக்கு பதிலடி.. நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா


அமெரிக்கா, தென் கொரியாவுக்கு பதிலடி.. நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா
x

சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது ராணுவ பலத்தை காட்டிவருகிறது. இவ்வாறு மாறி மாறி இரு தரப்பும் தங்கள் வலிமையை காட்டுவதால் பதற்றம் நீடிக்கிறது.

சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற கப்பலும் இதில் அடங்கும்.

இந்த கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.

இதுதொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் "அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான 'ஹேயில்-5-23'-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டின் தொடக்கத்திலும், அணுசக்தி தாக்குதல் டிரோன் மூலம் நீருக்கடியில் ஆளில்லா அணு ஆயுத சோதனையை பலமுறை நடத்தியதாக வட கொரியா கூறியது. இந்த டிரோன் ஹேயிலின் முந்தைய வெர்சன் என கூறப்பட்டது. கொரிய மொழியில் ஹேயில் என்றால் சுனாமி என்று பொருள். இது கதிரியக்க சுனாமியை உருவாக்கக்கூடிய வல்லமை படைத்தது என்றும் வட கொரியா தெரிவித்தது.

ஆனால், வட கொரியாவிடம் உண்மையில் அத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் உள்ளதா? இல்லையா? என ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இரு நாடுகளும் பதற்றத்தை குறைக்கும் ஒப்பந்தங்களை புறக்கணித்து, எல்லை பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் எல்லையில் நேரடி துப்பாக்கிச்சூடு பயிற்சிகளை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த வாரம் பேசும்போது, தென் கொரியா தனது நாட்டின் முதன்மை எதிரி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story