24 மணிநேரத்தில் 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் அழிப்பு; இஸ்ரேல் பாதுகாப்பு படை


24 மணிநேரத்தில் 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் அழிப்பு; இஸ்ரேல் பாதுகாப்பு படை
x
தினத்தந்தி 24 Oct 2023 8:07 AM GMT (Updated: 24 Oct 2023 9:38 AM GMT)

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் 400-க்கும் மேற்பட்ட இலக்குகள் கடந்த 24 மணிநேரத்தில் அழிக்கப்பட்டு உள்ளன என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 18-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

தொடர்ந்து, தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்தவும் திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் திறன்களை அழிப்பதற்காக, கடந்த 24 மணிநேரத்தில் 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகள் அழிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு இருந்தது. இஸ்ரேலுக்குள் கடல் வழியே ஊடுருவுவதற்கு, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்க பாதையை அனுமதித்து இருந்தது.

மசூதிகளை இந்த அமைப்பானது கட்டளை மையங்களாக பயன்படுத்தி கொண்டதுடன், ஆயுதங்களை பதுக்கி வைக்கவும் பயன்படுத்தியது என்று தெரிவித்து உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர்ந்து, செயல்படும் என்றும் அதில் தெரிவித்து உள்ளது.


Next Story