பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்கள் மீண்டும் ஒப்படைப்பு
![பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்கள் மீண்டும் ஒப்படைப்பு பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்கள் மீண்டும் ஒப்படைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/11/12/1591115-nawaz-sharif.webp)
தோஷகானா ஊழல் என்பது பதவியில் இருந்தபோது பெற்ற வெளிநாட்டு பரிசுப்பொருட்களை விற்று சொத்து சேர்ப்பது ஆகும்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (வயது 73). 3 முறை பிரதமராக இருந்த இவர் மீது தோஷகானா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தோஷகானா ஊழல் என்பது பதவியில் இருந்தபோது பெற்ற வெளிநாட்டு பரிசுப்பொருட்களை விற்று சொத்து சேர்ப்பது ஆகும். இதுதொடர்பான வழக்கில் இவருக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து 2020-ம் ஆண்டு அவரது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக 2019-ம் ஆண்டு லண்டன் சென்றிருந்தார். பின்னர் அங்கேயே தலைமறைவான அவர் கடந்த மாதம் 21-ந்தேதி நாடு திரும்பினார். முன்னதாக அவர் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டையும் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. இந்தநிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் ஆஜராகினார். கோர்ட்டில் அவர் ஆஜரானதால் தோஷகானா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அவரது அனைத்து சொத்துக்களையும் திரும்ப ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.