சோதனை என்ற பெயரில் கார் திருடிய போலீசார்; இம்ரான் கானின் கட்சி தலைவர் குற்றச்சாட்டு


சோதனை என்ற பெயரில் கார் திருடிய போலீசார்; இம்ரான் கானின் கட்சி தலைவர் குற்றச்சாட்டு
x

சோதனை என்ற பெயரில் போலீசார் எனது காரை திருடி சென்று விட்டனர் என இம்ரான் கானின் கட்சி தலைவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் புதிய பொது செயலாளராக உமர் அயூப் கான் நேற்று நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், இன்று அதிகாலை 12.30 மணியளவில் ஷாலிமர் காவல் நிலையத்தில் இருந்து இஸ்லாமாபாத் போலீசார் எனது வீட்டுக்கு மீண்டும் சோதனையிட வந்தனர்.

அவர்களிடம் சோதனைக்கான வாரண்ட் எதுவும் இல்லை. நான் நிறுத்தி வைத்திருந்த டொயோட்டா ஹை லக்ஸ் டுவின் கேபின் ரக கார் ஒன்றை அவர்கள் திருடி சென்று விட்டனர். சட்டவிரோத சோதனையில் ஈடுபடுவதுடன், தற்போது வாகன திருட்டிலும் இஸ்லாமாபாத் போலீசார் ஈடுபடுகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

நீதிமன்றம், பொது ஊழியர்கள் மற்றும் தூதர்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அதிக பணவீக்கம் உள்ள சூழலில், தங்களது வருவாயை பெருக்கி கொள்ள வாகனங்களை திருடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

எனது திருடப்பட்ட வாகனத்திற்காக யாரிடம் சென்று நான் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியும்? திருடர்களை பிடிக்கும்படி திருடர்களிடமே நான் கேட்க வேண்டுமா? என் அவர் பதிவிட்டு உள்ளார். போலீசார் மீதே கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story