ஜனாதிபதி திரவுபதி முர்மு செர்பியாவில் 4 நாள் சுற்றுப்பயணம்


ஜனாதிபதி திரவுபதி முர்மு செர்பியாவில் 4 நாள் சுற்றுப்பயணம்
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் பயணம் முடிந்து செர்பியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் செய்ய இன்று சென்று உள்ளார்.

பெல்கிரேடு,

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சூரிநாம் மற்றும் செர்பியா ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன்படி, கடந்த ஞாயிற்று கிழமை சூரிநாமின் பராமரிபோ நகரில் உள்ள ஜோஹன் அடால்ப் பென்ஜல் சர்வதேச விமான நிலையத்தில் சென்றிறங்கினார். அவரை, அந்நாட்டு தலைவர் மற்றும் இந்திய தூதர் உள்ளிட்டோர் முறைப்படி வரவேற்றனர்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். சூரிநாம் நாட்டுக்கு, இந்தியர்கள் வந்தடைந்த 150 ஆண்டுகள் நிறைவையொட்டி கலாசார திருவிழா ஒன்றும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி முர்மு மற்றும் சூரிநாமின் அதிபரான சந்திரிகாபிரசாத் சந்தோகி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து ஜனாதிபதி முர்மு பேசினார்.

அப்போது இந்தியாவுக்கும், சூரிநாமுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன என குறிப்பிட்டார். அவர் பேசும்போது, உங்களுடைய நாட்டின் பசுமையான நிலப்பரப்பின் அழகு, குறிப்பிடத்தக்க வகையில் வெவ்வேறு தாவரங்கள் மற்றும் வனவிலங்கு மற்றும் தூய்மையான தென்றல் காற்று என ஆச்சரியம் நிறைந்த சூழலை உருவாக்குகிறது.

எனினும், சூரிநாமில் மக்களின் பன்முக தன்மையே எனது நெஞ்சம் கொள்ளை கொண்ட ஒன்றாக அமைந்து உள்ளது. உங்களது சிறப்பான வரவேற்பு, உங்களுடைய அன்பு, ஆர்வம் ஆகியவையும் கூட. நான் எனது சொந்த நாட்டில் இருப்பது போன்று உணர்கிறேன் என முர்மு அப்போது பேசினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, முதன்முறையாக சூரிநாமுக்கு, இந்தியாவில் இருந்து மக்களின் முதல் குழு ஒன்று கப்பலில் புறப்பட்டு கடந்த 1873-ம் ஆண்டு சென்றடைந்தனர். சூரிநாமுக்கு இந்தியர்கள் வந்தடைந்த 150-வது ஆண்டுதினம் கொண்டாடப்படுகிறது.

இதற்காக நாம் அனைவரும் இன்று ஒன்றாக கூடியிருக்கிறோம். சூரிநாமின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் ஆகும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டார். கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலான முர்முவின் இந்த பயணம் நிறைவடைந்ததும், அவர் இன்று காலை செர்பியாவுக்கு புறப்பட்டார். அவர், செர்பியாவின் பெல்கிரேடு நகரில் உள்ள நிகோலோ டெஸ்லா விமான நிலையத்தில் இன்று மாலை தனி விமானத்தில் சென்றிறங்கினார்.

இதன்பின், செர்பியாவின் காந்திஜீவா சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன், அந்நாட்டு தொழிலாளர் துறை மந்திரி நிகோலா செலாகோவிச் மற்றும் பெல்கிரேடு மேயர் அலெக்சாண்டர் சாலிக் ஆகியோரும் உடன் இருந்தனர். செர்பிய அதிபர் அலெக்சாண்டர் உசிச் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு சென்றுள்ள ஜனாதிபதி முர்மு வருகிற 9-ந்தேதி வரை அந்நாட்டில் இருப்பார்.

செர்பியாவில் இருந்து 2008-ம் ஆண்டு கொசோவோ விடுதலை பெற்று விட்டது என அறிவித்து கொண்டது. எனினும், இதனை இந்தியா அங்கீகரிக்கவில்லை. கடந்த வாரம் கொசோவோவில் நடந்த தேர்தலில் அல்பேனிய மேயர்களை நியமித்ததற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இந்த சூழலில், ஜனாதிபதி முர்முவின் செர்பிய பயணம் அமைந்து உள்ளது.


Next Story