சூரினாமில் வாழும் இந்தியர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு


சூரினாமில் வாழும் இந்தியர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு
x

சூரினாம் நாட்டில் வாழும் இந்தியர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார்.

பராமரிபோ,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி திரவுபதி முர்மு சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். தொடர்ந்து சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, 'கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்' விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இந்திய-சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்' என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சூரினாமின் தலைநகர் பராமரிபோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சூரினாம் நாட்டில் வாழும் இந்தியர்களை திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சூரினாம் நாட்டில் வாழும் இந்தியர்கள், இந்த நாட்டின் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்" என்று தெரிவித்தார்.


Next Story