மனைவி அக்சதாவின் பங்குகள்.. கவனக்குறைவான விதிமீறலுக்கு மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்


மனைவி அக்சதாவின் பங்குகள்.. கவனக்குறைவான விதிமீறலுக்கு மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர்
x

அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தில் ரிஷி சுனக்கின் மனைவிக்கு பங்குகள் உள்ளன.

லண்டன்:

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்சதா மூர்த்திக்கு வருமானம் வரும் தொழில் தொடர்பான தகவலை பிரகடனம் செய்ய தவறியதன் மூலம், பாராளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது.

குழந்தை பராமரிப்பு திட்டத்தில் சேரும் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. இந்த நிதி வழங்குவதற்காக அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தில் ரிஷி சுனக்கின் மனைவிக்கு பங்குகள் உள்ளன. இதை அறிவிக்க ரிஷி சுனக் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற தரநிலை கமிஷனர் கிரீன்பெர்க் விசாரணை நடத்தினார். அப்போது, மந்திரிசபை பதிவேட்டில் இந்த தகவலை அறிவித்திருப்பதாக ரிஷி சுனக் கூறினார்.

இதையடுத்து, பதிவு என்ற கருத்தை பிரகடனத்துடன் ரிஷி சுனக் குழப்பிவிட்டார் என்பதால், கண்காணிப்பு அமைப்பு தலைவர் கிரீன்பெர்க் ரிஷி சுனக்கின் பதிலில் திருப்தி அடைந்தார். இது குழப்பத்தால் ஏற்பட்ட கவனக்குறைவு என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து பாராளுமன்ற தரநிலை கண்காணிப்பு அமைப்பிடம் பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக கமிஷனர் கிரீன்பெர்க்கிற்கு அவர் எழுதிய கடிதத்தில், கவனக்குறைவான பிழைகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், திருத்துவதற்கான முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.


Next Story