அமெரிக்க இன நாய்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் திட்டம்; நெட்டிசன்கள் இடையே கடும் எதிர்ப்பு


அமெரிக்க இன நாய்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் திட்டம்; நெட்டிசன்கள் இடையே கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Sep 2023 9:23 AM GMT (Updated: 16 Sep 2023 9:33 AM GMT)

அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி வகை நாய்களுக்கு தடை விதிக்க இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டு உள்ளார்.

லண்டன்

அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்றில், அமெரிக்காவின் எக்ஸ்.எல். புல்லி இன நாய்கள் நம்முடைய சமூகத்திற்கு ஆபத்து ஏற்படுத்த கூடியவை என தெளிவாக தெரிகிறது.

இதனை வரையறை செய்து, தடை செய்ய உடனடி வேலைகளை மேற்கொள்ளும்படி நான் உத்தரவிட்டு உள்ளேன். அதனால், இந்த வன்முறை தாக்குதல்களுக்கு முடிவு ஏற்படுத்தி, மக்களை பாதுகாப்பாக வைக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த விசயம், நாய்களுக்கு பயிற்சி அளிப்பதுடன் தொடர்புடையவை அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. இது, அவை நடந்து கொள்ளும் முறையை சார்ந்தது. அதனை இப்படியே விடமுடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்த இன நாய்கள் மிக ஆபத்து நிறைந்தவை. ஆபத்து விளைவிக்கும் நாய்கள் சட்டத்தின் கீழ் இந்த இன நாய்களை அரசு தடை விதிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என தெரிவித்து உள்ளார்.

இந்த வீடியோவுக்கு உடனடியாக நெட்டிசன்கள் பலர் வருத்தம் தெரிவித்து உள்ளனர். வீடியோ பகிரப்பட்டு சில மணிநேரங்களில், அது வைரலானது. 12 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். ஒரு சிலர் பிரதமரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும், வேறு சிலர் இந்த இன நாய்களுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இதில் பிரச்சனை என்னவெனில், நாய்களின் உரிமையாளர்கள் சார்ந்தது என்றும், இந்த இன நாய்களை பற்றியது அல்ல என்றும் பலர் வாதிடுகின்றனர். இதுவரை மொத்தம் 1.68 கோடிக்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.


Next Story