ஆஸ்திரேலியா துறைமுகத்தில் ரூ.14 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்


ஆஸ்திரேலியா துறைமுகத்தில் ரூ.14 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்
x

கோப்புப்படம்

ஆஸ்திரேலியா துறைமுகத்தில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து அதிகாரிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் உலோகங்கள் உருக்கும் ராட்சத எந்திரங்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்று அவர்களின் சந்தேகத்தை கிளப்பியது. அதன்பேரில் மோப்பநாய்களை கொண்டு அதனை சோதித்தபோது எந்திரங்களை பார்த்து அவை குரைத்தன.

அந்த எந்திரங்களை என்ஜினீயரிங் வல்லுனர்களை கொண்டு ஆராய்ந்தபோது அவற்றின் உள்ளே பாலித்தீன் பாக்கெட்டுகளில் போதைப்பொருள் இருந்தது தெரிந்தது. கண்டறிதலை தவிர்க்கும் வகையில் பல அடுக்கு பூச்சுகளை கொண்ட எந்திரங்களுக்குள் தந்திரமாக அவற்றை மறைத்துள்ளனர்.

300 கிலோ அளவில் மெத்தபேட்டமைன் என்னும் உயர்ரக போதைப்பொருளை கைப்பற்றி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட இருந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தி வந்த கப்பல் எந்த நாட்டில் இருந்து வந்தது, கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story