பேஸ்புக் - வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ரஷியா..!


பேஸ்புக் - வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ரஷியா..!
x

Image Credit:Reuters

தினத்தந்தி 11 Oct 2022 1:34 PM GMT (Updated: 11 Oct 2022 1:37 PM GMT)

பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.

மாஸ்கோ,

அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா பிளாட்பார்ம்ஸ் இன்கார்ப் நிறுவனத்தை பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து தடை செய்யப்பட்ட பட்டியலில் ரஷியாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் ரோஸ்பின்மானிடரிங் இணைத்துள்ளது.

இதன்மூலம், பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மெட்டா நிறுவனம் அளித்து வரும் சேவைகள் ரஷியாவில் துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் ரஷியாவில் தீவிரவாத நடவடிக்கையில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ரஷியாவின் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆணையம், பேஸ்புக்கை தடை செய்தது.

ரஷிய அரசாங்க ஆதரவு செய்திகளை பயனர்கள் பார்ப்பதை பேஸ்புக் கட்டுப்படுத்தியதாக கூறப்பட்டது. உக்ரைன் மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து, ரஷிய படையெடுப்பாளர்களை எதிர்த்து வன்முறைக்கு அழைப்பு விடுத்திருந்த பேஸ்புக் பதிவுகளை மெட்டா தற்காலிகமாக அனுமதித்ததாகவும் கூறப்பட்டது.

மெட்டா தரப்பில், தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று வாதாடியது. ஆனால் இந்த வழக்கை ஜூன் மாதம் விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று, மெட்டாவின் மேல்முறையீட்டை நிராகரித்தது.

இந்த நிலையில், இன்று மெட்டாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.


Next Story