கிலோ கணக்கில் தங்க கடத்தல்; நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது


கிலோ கணக்கில் தங்க கடத்தல்; நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
x

நேபாளத்தில், 2022-ம் ஆண்டு இ-சிகரெட்டில் மறைத்து வைத்து 9 கிலோ தங்கமும், தொடர்ந்து 2023-ம் ஆண்டில் 61 கிலோ தங்கமும் கடத்தப்பட்டு உள்ளது.

காத்மண்டு,

நேபாளத்தின் பிரதமராக இருந்து வரும் புஷ்ப கமல் தஹல் நேபாள கம்யூனிஸ்டு கட்சியின் (மத்திய மாவோயிஸ்டு) தலைவராகவும் இருந்து வருகிறார். இதன் துணை தலைவராக கிருஷ்ண பகதூர் மஹரா இருந்து வருகிறார். நாடாளுமன்ற கீழவையின் முன்னாள் சபாநாயகராகவும் பதவி வகித்த அனுபவம் வாய்ந்தவர்.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு இ-சிகரெட்டில் மறைத்து வைத்து 9 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 2023-ம் ஆண்டில் 61 கிலோ தங்கம் கடத்தப்பட்டு உள்ளது. இந்த சூழலில், கிருஷ்ண மஹராவின் மகனான ராகுல் மஹராவுக்கு எதிராக கடந்த ஆண்டு, மாவட்ட அட்டர்னி அலுவலகம் வழக்கு ஒன்றை பதிவு செய்தது.

9 கிலோ தங்கம் கடத்தப்பட்டதில் இவருக்கு தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று, கிருஷ்ண மஹராவிடம் நடந்த போலீசாரின் விசாரணையில், சீன கடத்தல்காரர்களுடன் இவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார் என கண்டறியப்பட்டது.

கடந்த வாரம், முன்னாள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தில்லி ராஜ் தலைமையிலான விசாரணை ஆணையம் வழங்கிய அறிக்கை, உள்துறை மந்திரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது பின்னர் பிரதமர் கமலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கபிலவஸ்து மாவட்டத்தில் வைத்து, கிருஷ்ண பகதூர் இன்று கைது செய்யப்பட்டார்.

கோர்ட்டின் அனுமதியுடன் அவர் காவலில் வைக்கப்படுவார். அவரை இன்று காலை விமானம் வழியே அதிகாரிகள் காத்மண்டு நகருக்கு கொண்டு சென்றனர். அவருடைய காவலை நீட்டிப்பதற்காக, மஹரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story