ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே


ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவோம் - இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
x

Image Courtacy:AFP 

வேறு நாடுகளிடம் கச்சா எண்ணெய் கிடைக்காவிட்டால், ரஷியாவிடம் இருந்து வாங்குவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.

கொழும்பு,

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த எரிபொருட்களுக்காக பல கி.மீ. தூரத்துக்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க தடை விதித்துள்ளன.

இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உக்ரைன் பிரச்சினையில் மற்ற தெற்கு ஆசிய நாடுகளைப் போல் நடுநிலை வகித்து வரும் இலங்கை, ரஷியாவிடம் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு 99 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் வாங்கியது.

ரணில் பேட்டி

இந்தநிலையில், மீண்டும் ரஷியாவிடம் வாங்க தயாராக உள்ளது. இதுகுறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கைக்கு எரிபொருள் தேவை அதிகமாக உள்ளது. வழக்கமாக வாங்கும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயும், நிலக்கரியும் வாங்க முயன்று வருகிறோம்.

வேறு எங்காவது கிடைத்தாலும் வாங்குவோம். இல்லாவிட்டால், மீண்டும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம். தனியாரிடமும் கச்சா எண்ணெய் வாங்க எங்கள் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

நாங்களே உருவாக்கிய நெருக்கடி

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாங்களே உருவாக்கிக் கொண்டதுதான். காய்கறிகள் விலை 3 மடங்கு கூடிவிட்டது. நெல் சாகுபடி மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது.

நான் இதற்கு முன்பு அரசாங்கத்தில் இருந்தபோதெல்லாம், மக்களுக்கு 3 வேளை உணவு கிடைப்பதையும், வருமானம் உயருவதையும் உறுதி செய்துள்ளேன். ஆனால் இப்போது மக்கள் படும் வேதனையை ஒரு குடிமகனாகவும், பிரதமராகவும் அச்சத்துடன் பார்க்கிறேன்.

சீனாவிடம் கடன்

உணவு இல்லாமல், எரிபொருள் இல்லாமல் மக்கள் தவிப்பதை இதற்கு முன்பு நான் பார்த்தது இல்லை. உக்ரைன் போரும் பொருள் வினியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தி, எங்கள் பொருளாதாரத்தை பாதித்துவிட்டது. 2024-ம் ஆண்டுவரை உணவு தட்டுப்பாடு நீடிக்கும். உணவு தானிய ஏற்றுமதியை பல நாடுகள் நிறுத்திவிட்டன.

இலங்கையின் பொருளாதாரத்ைத மீட்டெடுக்க என்னென்ன திட்டங்கள் அவசியம் என்று நாங்கள் அடையாளம் காண வேண்டும். அந்த திட்டங்களுக்காக சீனாவிடமோ அல்லது வேறு நாடுகளிடமோ கடன் பெற வேண்டும். மற்ற நாடுகளுடன் சீனாவும் எங்களுக்கு நிவாரணம் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது என்று அவர் கூறினார்.


Next Story