மந்திரி சபை விரிவாக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: இலங்கை அதிபருக்கு நெருக்கடி


மந்திரி சபை விரிவாக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: இலங்கை அதிபருக்கு நெருக்கடி
x

இலங்கை மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக 37 பேர் இணை மந்திரிகளாக பொறுப்பேற்றனர்.

கொழும்பு,

அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் வெகுண்டெழுந்தனர். மக்கள் கிளர்ச்சிக்கு பயந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்து ராஜபக்சே சகோதரர்கள் விலகினர். இதையடுத்து, புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்நிலையில், இலங்கை மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.புதிதாக 37 பேர் இணை மந்திரிகளாக பொறுப்பேற்றனர். இதில், முன்னாள் அதிபர் கோத்தபயவின் உறவினர் சசீந்திரா ராஜபக்சே, நீர் பாசனத் துறை இணை மந்திரியாக பொறுப்பேற்றார். மந்திரிசபை விரிவாக்கத்தில், ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளாத நிலையில், தற்போது எதற்காக மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்ட்டது என்று ரணில் விக்ரமசிங்கேவிற்கு இலங்கை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. விலை உயர்வு கடுமையாக இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருவது குறித்து அதிபருக்கு எந்த அக்கறையும் இல்லை என்று இலங்கையின் பிராதன எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதேசா தெரிவித்துள்ளார்.


Next Story