சூடானில் தொடரும் வன்முறை : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு


சூடானில் தொடரும் வன்முறை : பலி எண்ணிக்கை 200 ஆக உயர்வு
x

சூடானில் ஏற்பட்ட வன்முறை காரணமாக கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்டூம்,

ராணுவ ஆட்சி நடந்து வரும் சூடானில் ராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளில், `ஆர்எஸ்எப்' என்ற துணை ராணுவ படையே ஈடுபட்டு வருகிறது. அதன்படி தலைநகரான கார்டூமில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் சர்வதேச விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் துணை ராணுவ படையினர் அறிவித்தனர்.

இதனால் கார்டூமில் ராணுவத்துக்கும், துணை ராணுவ படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. பின்னர் இது நாடு முழுவதும் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் ஒரு இந்தியர் உள்பட 56 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அங்கு நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. தலைநகர் கார்டூம் உள்பட பல்வேறு நகரங்களில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 200 பேர் உயிரிழந்ததாகவும், 1,800-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூடானில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதனிடையே சூடானில் நடந்து வரும் வன்முறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில் தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்ததை காட்டும் படங்கள் வெளியாகி உள்ளன.


Related Tags :
Next Story