பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் -சரத் பொன்சேகா


பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் -சரத் பொன்சேகா
x

இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் ராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியுமான சரத் பொன்சேகா 14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையேசொல்லி வருகிறார் என கூறினார்

கொழும்பு

பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை இலங்கை அரசியல்வாதிகள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இது தொடர்பாக இலங்கை எம்பியான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியதாவது:

பிரபாகரன் இப்போது நரகத்தில்தான் இருக்கிறார். பல லட்சக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தவர் பிரபாகரன். அதனால்தான் நரகத்தில் இருக்கிறார் பிரபாகரன்.

பிரபாகரனை அழைத்துவர விரும்பினால் பழ.நெடுமாறனும் நரகத்துக்குதான் போக வேண்டும். அங்குபோய்தான் பிரபாகரனை பழ.நெடுமாறன் அழைத்து வர வேண்டும். இவ்வாறு சரத் வீரசேகர கூறினார்.

இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் என கூறினார்

மேலும் அவர் கூறும் போது பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்லஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார்கள். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை. போராட்டத்தில் தனது குடும்பத்தையே அர்ப்பணித்தவராக பிரபாகரன் திகழ்கின்றார்.

இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.

அவர்களில் ஒருவர்தான் பழ.நெடுமாறன். அவர் இறுதிப்போர் நிறைவடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது அவர், பிரபாகரன் மட்டுமன்றி அவரின் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளார்கள் என்றும், மூவரும் நலமாக உள்ளார்கள் என்றும் மேலும் பொய்யான தகவலை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story