சிலி நாட்டில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு


சிலி நாட்டில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
x

சிலி நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சாண்டியாகோ,

பூமியில் மனித இனம் தோன்றுவதற்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, பிரம்மாண்டமான உருவங்களைக் கொண்ட டைனோசர்கள் வாழ்ந்து வந்துள்ளன. விண்கல் மோதல் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால், டைனோசர் இனம் மொத்தமாக அழிந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அத்தகைய டைனோசர்களின் தொல்லியல் எச்சங்கள் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தற்போது சிலி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஹூடாகோண்டோ என்ற சிறிய நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர்களின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலி மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுனர் குழு ஆய்வு மேற்கொண்டபோது 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டைனோசர் கால்தடங்களை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து தொல்லியல் நிபுணர் கிறிஸ்டியன் சலாசர் கூறும்போது, "எனது தொழில் முறை அனுபவத்தில் இது உண்மையிலேயே முன்னோடியில்லாத ஒன்று. 10 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்தடங்களை கண்டுபிடித்தோம். இங்கு மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இது ஒரு சிறந்த திட்டத்தின் தொடக்கமாகும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story