'புளூ டிக்' சரிபார்ப்பு அடையாளத்துடன் 8 டாலர் மாத சந்தாவை அறிமுகப்படுத்திய டுவிட்டர்


புளூ டிக் சரிபார்ப்பு அடையாளத்துடன் 8 டாலர் மாத சந்தாவை அறிமுகப்படுத்திய டுவிட்டர்
x

கோப்புப்படம்

‘புளூ டிக்’ சரிபார்ப்பு அடையாளத்துடன் 8 டாலர் மாத சந்தாவை டுவிட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது.

வாஷிங்டன்,

உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

மேலும், உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரேநாளில் பணிநீக்கம் செய்தது. இது தொடர்பாக மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டுவிட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக, துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒருநாளைக்கு ரூ.32 கோடியை இழக்கும்போது வேறு வழியில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டுவிட்டர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 8 டாலருக்கான சந்தா சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் இயங்குதளத்தின் சரிபார்ப்பு முறையை மாற்றியமைத்ததால் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு இப்போது புளூ டிக் மார்க் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐஒஎஸ் (Apple iOS) சாதனங்களுக்கான புதுப்பிப்பில், "இப்போது பதிவுபெறும்" பயனர்கள், "நீங்கள் ஏற்கனவே பின்தொடரும் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளைப் போலவே, அவர்களின் பெயர்களுக்கு அடுத்ததாக புளூ டிக் சரிபார்ப்பு அடையாளத்தைப் பெறலாம்" என்று டுவிட்டர் தெரிவித்துள்ளது.

இதனிடையே டுவிட்டரில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து டுவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி தனது பதிவில், "டுவிட்டரில் முன்பு பணியாற்றியவர்கள் மற்றும் இப்போதும் பணியாற்றுபவர்கள், வலிமையான மற்றும் நெகிழ்ச்சியானவர்கள். எவ்வளவு கடினமான தருணத்திலும் அவர்கள் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்கள். பலர் என் மீது கோபமாக இருப்பதை நான் உணர்கிறேன். எல்லோரும் ஏன் இந்த நிலைக்கு ஆளாகினார்கள் என்பதற்கு நான் பொறுப்பு. நான் நிறுவனத்தின் அளவை மிக விரைவாக வளர்த்தேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.


Next Story