மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா மனு தள்ளுபடி - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு


மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா மனு தள்ளுபடி - அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

நாடு கடத்தும் விவகாரம் தொடர்பாக மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவின் மனுவை தள்ளுபடி செய்து அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

வாஷிங்டன்,

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக பாகிஸ்தானைப் பூர்விகமாக கொண்டுள்ள கனடா தொழில் அதிபர் ராணா (வயது 62) உள்ளார். அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்த வழக்கு விசாரணை, லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கோர்ட்டு உத்தரவின்பேரில், அரசு தரப்பும், குற்றவாளி தரப்பும் வழக்கு விவரங்களை தெரிவித்து, தற்போதைய நிலையை விவாதிப்பது தொடர்பான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராணா ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பு 30 நாளில் வந்து விடும் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story