அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடிவு


அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்: டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முடிவு
x

கோப்புப்படம் 

அமெரிக்க நாடாளுமன்றகலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்தும் நாடாளுமன்ற குழு விசாரித்து வந்தது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடந்தாக குற்றம் சாட்டி வந்தார்.

இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.

இந்த கலவரம் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகிறது. இதில் கலவரத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் டிரம்பின் தொடர்பு குறித்தும் நாடாளுமன்ற குழு விசாரித்து வந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற குழு தனது விசாரணையை நிறைவு செய்துவிட்டதாகவும், கலவரம் தொடர்பாக டிரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டுதல் உள்பட 3 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைக்க குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த குழு அடுத்த வாரம் தனது முழு விசாரணை அறிக்கையை வெளியிடும் எனவும், அப்போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக அறிவிக்கப்படும் எனவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Next Story