இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை


இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் - பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை
x

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். அவர் நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

வாஷிங்டன்,

'ஜி-20' கூட்டமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அதன்படி கடந்த ஓராண்டாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 'ஜி-20' தொடர்பான மாநாடுகள் நடைபெற்றன. இறுதியாக 'ஜி-20' அமைப்பின் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட 'ஜி-20' உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி

அதன்படி ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இந்தியாவின் அழைப்பை ஏற்று, மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 'ஜி-20' மாநாடு தொடங்கும் 2 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது செப்.7-ந் தேதியே இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாநாட்டுக்கு முன்பு அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டது.

மனைவிக்கு கொரோனா

இந்த சூழலில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கடந்த திங்கட்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜோ பைடன் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும் ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில் ஜோ பைடன் இந்தியா வருவதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களாக ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. எனவே அவரது பயணத்திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை.

மோடியுடன் பேச்சுவார்த்தை

அதன்படி 'ஜி-20' உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன் 7-ந் தேதி (இன்று) இந்தியாவுக்கு புறப்படுகிறாா். அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி-ஜனாதிபதி ஜோ பைடன் இடையேயான இரு தரப்பு பேச்சுவாா்த்தை 8-ந் தேதி (நாளை) நடைபெறுகிறது. தொடா்ந்து, செப். 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் 'ஜி-20' உச்சிமாநாட்டு அமா்வுகளில் அவா் பங்கேற்பாா்.

ஜனாதிபதி ஜோ பைடனின் இந்த பயணத்தில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்பட அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அனைத்து வழிக்காட்டுதல்களும் முறையாக பின்பற்றப்படும்.

ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், அவருடன் செல்லும் அதிகாரிகளுக்கும் இந்தியா புறப்படுவதற்கு முன்பும், அதற்கு பிறகும் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.


Next Story