வலுத்த போராட்டம்: அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றார் கோத்தபய ராஜபக்சே


வலுத்த போராட்டம்: அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்றார் கோத்தபய ராஜபக்சே
x

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். அவர் சிங்கப்பூருக்கு தப்பி ஓடியுள்ளார்.

கொழும்பு,

திவால் நிலைக்கு சென்று விட்ட இலங்கையில் மக்கள் வாழ்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டு வருகிறது. இதனால் கொதித்து போயிருக்கும் மக்கள் கடந்த 9-ந்தேதி பெரும் கிளர்ச்சியில் இறங்கினர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தலைநகர் கொழும்புவில் திரண்டு அதிபர் மாளிகையை கைப்பற்றி உள்ளனர்.

மிகுந்த கோபாவேசத்தோடு கொழும்புவில் போர்க்கோலம் பூண்டுள்ள அவர்களை ராணுவம் மற்றும் போலீசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மாலத்தீவு சென்றார்

மனித சுனாமியாக அலை அலையாக கொழும்பு நோக்கி வந்த மக்களிடம் சிக்கினால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்து கொண்ட அதிபர் கோத்தபய ராஜபச்சே, அதிபர் மாளிகையில் இருந்து முன்கூட்டியே வெளியேறி இருந்தார்.

பின்னர் அனைத்துக்கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தியதால், 13-ந்தேதி (நேற்று முன்தினம்) பதவி விலகுவதாக அறிவித்தார். ஆனால் அறிவித்ததுபோல அன்று ராஜினாமா செய்யவில்லை.

மாறாக தனது மனைவி லோமா மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை மாலத்தீவை அடைந்தார்.

இடைக்கால அதிபர்

அங்கிருந்தவாறே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். அரசியல் சாசன பிரிவு 37 (1)-ன் கீழ் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார்.

இதன்படி இடைக்கால அதிபரான ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் நாடு முழுவதும் அவசர நிலையை பிறப்பித்தார். அத்துடன் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கு மாகாணத்தில் ஊரடங்குக்கும் உத்தரவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகம் நோக்கி படையெடுத்தனர். அந்த அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்.

மாலத்தீவில் எதிர்ப்பு

இதற்கிடையே மாலத்தீவு சபாநாயகரும், முன்னாள் அதிபருமான முகமது நஷீத்தின் உதவியில் மாலத்தீவில் புகுந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு அங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

குறிப்பாக அங்கு வாழும் இலங்கை மக்களும், மாலத்தீவு மக்களில் ஒரு பிரிவினரும் போராட்டங்களில் இறங்கினர். அதேநேரம் மாலத்தீவு அரசிலும் கோத்தபய விவகாரம் பெரும் சலசலப்பை கிளப்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் இருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிட்டார்.

அதன்படி சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, மனைவி லோமா, பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் ஆகியோர் நேற்று மாலையில் சிங்கப்பூர் போய் சேர்ந்தனர். இதை சிங்கப்பூர் அரசும் உறுதி செய்தது. அதேநேரம் அங்கும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளது.

இலங்கையின் அதிபராக இருக்கும் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு நாடாக தப்பி ஓடும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பது சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

ராஜினாமா செய்தார்

இவ்வாறு நெருக்கடி முற்றியதை தொடர்ந்து இலங்கை அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே நேற்று விலகினார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனேவுக்கு அவர் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கோத்தபய ராஜினாமா செய்த தகவலை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத்தும் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து விட்டார். அவர் இலங்கையில் இருந்திருந்தால் இது நடந்திருக்காது என நினைக்கிறேன். அத்துடன் அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்திருக்கும். இலங்கை இனி முன்னோக்கி செல்லும் என நம்புகிறேன். இலங்கை மக்களுக்கு எனது வாழ்த்துகள்' என குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக, கோத்தபய ராஜபக்சே பதவி விலகவில்லை என்றால் அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகர் ஆலோசித்து வந்ததாக தகவல் வெளியாகி இருந்்தது குறிப்பிடத்தக்கது.


Next Story