"நிதியுதவி வழங்க முடியாது" - இலங்கையை கைவிட்ட உலக வங்கி
இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஜெனீவா,
அன்னிய செலாவணி பற்றாக்குறையால், இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால், அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலித்து வருகிறது.
இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் (எக்சிம் வங்கி) 50 கோடி டாலர் (ரூ.3 ஆயிரத்து 750 கோடி) கடன் கேட்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்தகவலை இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார். எக்சிம் வங்கியிடம் இலங்கை இதற்கு முன்பும் ரூ.3 ஆயிரத்து 750 கோடி கடன் பெற்றுள்ளது.
இந்தநிலையில், இலங்கை போதுமான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித்திட்டங்களை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும்,ஏழைகள், விவசாயிகள் ,சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






