உக்ரைனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளியேற அனுமதி கோரி மனு - அதிபர் ஜெலென்ஸ்கி பதில்

Image Credit: AFP Photo
உக்ரைனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளியேற அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று கடுமையாக சாடினார்.
கீவ்,
உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல் 108-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 24 முதல், போர் தொடங்கியதில் இருந்து, அந்நாட்டு ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாத படி, விதி அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து 18-60 வயதுடைய ஆண்கள் வெளியேற அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று கடுமையாக சாடினார்.
இது தொடர்பாக, அவர் உக்ரைன் அரசியலமைப்பின் பிரிவு 17-ஐ மேற்கோள் காட்டி பேசினார். அரசியலமைப்பின் 17-வது பிரிவு என்பது, நாட்டில் உள்ள ஆண்கள் தங்கள் தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்க கட்டாயப்படுத்துகிறது.
அதேபோல, அரசியலமைப்பின் பிரிவு 64ஐ மேற்கோள் காட்டி உள்ளார். அதாவது இராணுவச் சட்டம் அமலில் உள்ள போது, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மட்டுப்படுத்த அனுமதிக்கும் இந்த சட்டப் பிரிவு 64ஐ, அவரது நிர்வாகம் கடந்த பிப்ரவரி 24 அன்று விதித்தது. தொடர்ந்து, அதை அடுத்த 30 நாட்களுக்கு அவர் நீட்டிப்பு செய்தார்.
காணொலி வாயிலாக பேசிய அவர் கூறியதாவது:- "ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்க ராணுவத்துடன் இணைந்து தனது அரசு செயல்படும். அதே வேளையில், பொதுமக்கள் பீதியை தவிர்க்கவும், அதற்கு பதிலாக சண்டையிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
உக்ரைனில் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக போராடுவது அதன் மக்களின் பொறுப்பாகும்.நாம் வலிமையானவர்கள், எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கிறோம். நாம் உக்ரேனியர்கள் என்பதால் அனைவரையும் தோற்கடிப்போம்" என்று அதிபர் ஜெலென்ஸ்கி உறுதியளித்தார்.
இராணுவச் சட்டம் என்பது சிவில் சட்டங்களை இடைநிறுத்துவதற்கான நேரடி இராணுவ கட்டுப்பாட்டை தற்காலிகமாக சுமத்துவது ஆகும். அதிலும் குறிப்பாக தற்காலிக அவசரநிலைக்கு பதிலளிக்கும் வகையில், ஒரு அரசாங்கத்தால் நேரடி இராணுவ கட்டுப்பாட்டை தற்காலிகமாக அமல்படுத்துவதாகும்.






