உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோ‌ஷ வழிபாடு


உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோ‌ஷ வழிபாடு
x
தினத்தந்தி 10 March 2017 10:15 PM GMT (Updated: 10 March 2017 9:31 PM GMT)

உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உப்பிடமங்கலம்,

உப்பிடமங்கலத்தில் உள்ள கிளிசேர் மொழிமங்கை உடனுறை அடியார்க்கு எளியர் சிவன் கோவிலில் பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

தொடர்ந்து கிளிசேர் மொழிமங்கை உடனுறை அடியார்க்கு எளியர் சிவனுக்கும், கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிவன் சிறப்பு அலங்காரத்தில் ரி‌ஷபவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை அடியார்க்கு எளியர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் லிங்கத்தூர் சிவன் கோவில், புலியூரில் உள்ள வியாகிரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பிரதோ‌ஷ வழிபாடு நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள நன்செய்புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோ‌ஷ வழிபாட்டையொட்டி மேகபாலீஸ்வரர் முன்பு உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, அருகம்புல் வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மேகபாலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிவன் கோவில்களில்...

மாலை 6 மணியளவில் மேகபாலீஸ்வரர் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள மேட்டுப்பாளையம் சிவன் கோவில், நன்னியூர்புதூர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஈஸ்வரர்– சிவாம்பிகை கோவில், கரூர் அருகே உள்ள மண்மங்கலம் மரகதவள்ளி அம்பிகை மணிகண்டேஸ்வரர் கோவில் உள்பட சுற்று பகுதிகளில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story