நினைத்ததை நிறைவேற்றும் ஆயிரத்தம்மன்


நினைத்ததை நிறைவேற்றும் ஆயிரத்தம்மன்
x
தினத்தந்தி 30 May 2017 7:58 AM GMT (Updated: 30 May 2017 7:58 AM GMT)

திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். ஆயிரம் கண் உடையவள் என்பதால் இந்த அம்மன் ‘ஆயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

பல்லாண்டு காலத்திற்கு முன்பு இந்த அம்மன், பட்டாளத்து லயனில் (தற்போது உள்ள சமாதானபுரம்) ஒரு ஓலைக்குடிசையில் குடிகொண்டு இருந்தாள். அப்போது இந்தப் பகுதியில் கொடிய தொற்று நோய் பரவியது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் பீதியடைந்தனர்.

இதனையடுத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அம்மனை வேண்டி பொங்கலிட்டு, தொற்று நோயில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டி வழிபட்டனர். அங்கு வாழ்ந்து வந்த மக்களில் பெரும்பாலானோர் பட்டாளத்து வீரர்கள் ஆவார்கள். அவர்களும் அம்மனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் சென்றனர். இதனால் பட்டாளத்து வீரர்களால் அணிவகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் கோபம் கொண்ட அஹ்னிதுரை என்ற நவாப், பட்டாளத்து வீரர்களை அழைத்து ‘ஏன் அணிவகுப்புக்கு வரவில்லை?’ என்று கேட்டான்.

அதற்கு வீரன் ஒருவன், ‘இந்தப் பகுதியில் பரவியுள்ள நோய் தீர வேண்டி அம்மனுக்கு பொங்கல் வைக்க சென்றிருந்தோம். அதனால் அணிவகுப்புக்கு வர இயலாமல் போய் விட்டது’ என்றான்.

அதை கேட்டு ஆத்திர மடைந்த துரை, அம்மனின் திருமேனி மீது சுடுமாறு உத்தரவிட்டான். இதனால் அம்மன் சிலையின் கைகள், கால்கள், இடுப்பு பகுதி நொறுங்கி போய் விட்டது. மறுநாள் துரைக்கும், அவனது குடும்பத்தினருக்கும் கொடிய நோய் ஏற்பட்டு மிகுந்த கஷ்டத்திற்கு ஆளானார்கள்.

இதனால் பயந்துபோன துரை, தான் செய்த தவறை மன்னித்து விடுமாறும், தனது குடும்பத்தினரை காப்பாற்றுமாறும் அன்னையை வேண்டினான். மனம் இரங்கிய அம்மன், துரையின் குடும்பத்தினரை நோயில் இருந்து காப்பாற்றினாள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அம்மனின் சக்தி அனைவருக்கும் தெரியவந்தது.

சில காலம் கழித்து, பாளையங்கோட்டையில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அந்த ஆலயத்தின் கன்னி மூலையில் அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதற்கிடையில் ஆயிரத்தம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதில் பின்னம் அடைந்த அம்மன் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனுக்கு புதியதாக சிலை செய்ய வேண்டும் என்று மக்கள் எண்ணி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால் அருள் வாக்கு கூறிய அம்மன், தான் இப்படியே இருக்க விரும்புவதாக தெரிவித்ததால் மக்கள் மேற்கொண்டு எந்த பணியையும் செய்யவில்லை.

இதையடுத்து புதியதாக செய்யப்பட்ட அம்மன் சிலை, சிவன் கோவிலில் (திரிபுராந்தீஸ்வரர் கோவில்) வைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்தம்மன் கோவிலில் தற்போதும் நொறுங்கிய நிலையில் உள்ள அம்மனின் சிலையே வழிபாட்டில் இருக்கிறது.

இக்கோவிலில் தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் பூஜைகள் நடைபெறுகிறது. இக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் பத்தாவது நாள் அன்று, இக்கோவில் மற்றும் அருகில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்து சப்பரங்கள் வீதி உலா வரும்.

கர்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஆகிய ஊர்களுக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா பாளையங்கோட்டையில் கோலாகலமாக நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

-நெல்லை வேலவன்.

Next Story