தீர்க்க ஆயுள் அருளும் குரங்கணி முத்துமாலை அம்மன்


தீர்க்க ஆயுள் அருளும் குரங்கணி முத்துமாலை அம்மன்
x
தினத்தந்தி 14 Jun 2017 9:55 AM GMT (Updated: 14 Jun 2017 9:55 AM GMT)

கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.

தேவி தரிசனம் பாவ விமோசனம் என்பார்கள். மனித வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பாவங்கள் செய்து வருகிறோம். அதிலிருந்து விடுபட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த அன்னையின் திருத்தல வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் சிறைபிடித்து சென்றான். சீதாதேவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்கு செல்ல ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம். குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.

முத்துமாலை அம்மன்


ராவணன் சீதாதேவியை கடத்திச் சென்றபோது, சீதா தேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்து மாலையை கழற்றி வீசினாள். புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்து மாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி முத்துமாலை கிடந்த இடத்தில் சீதா தேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர். முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதா தேவி தங்கி இருப்பதாக நினைத்து அதற்கு முத்துமாலை அம்மன் என பெயரிட்டனர்.

செவிவழி செய்தியாக கூறப்பட்டு வரும் அதிசய சம்பவம் அம்மனின் மகிமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார். அதற்கு கோவிலின் சுற்றுச்சுவர் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச்சுவரை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அவ்வூரை சேர்ந்த நான்கு சகோதரர்கள் வம்சா வழியினர் தடுத்தனர். அப்போது அந்த அதிகாரி ‘இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால், நான் கூப்பிடுகிறேன், அது பதில் சப்தம் தருமா?’ என கேட்க, அதற்கு அவர்கள் ‘நிச்சயம் தரும்’ என்றனர்.

‘முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன்’ என 3 முறை கூப்பிட்டார் அந்த ஆங்கிலேய அதிகாரி. ‘என்ன?’ என்ற சப்தம் இடி போன்ற ஒலி கோவில் கருவறையில் இருந்து கேட்டது. சப்தத்தை கேட்ட அதிர்ச்சியில் அந்த அதிகாரி மயங்கி கீழே விழுந்தார். உடன் குதிரையும் மயங்கி விழுந்தது.  கூடி இருந்தவர்கள் பயபக்தியுடன் நின்றார்கள். அம்மன் தீர்த்தம் தெளித்து எழுப்பியதும் அதிகாரிக்கும், குதிரைக்கும் சுய உணர்வு வந்தது. கோவிலை இடிக்காமல் விட்ட அதிகாரி 2 மண் குதிரைகள் செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார். அந்த குதிரைகளை இன்றும் கோவிலில் பெரிய சுவாமி சன்னிதியில் காணலாம்.

பழங்காலத்தில் இத்திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை மட்டும் நடந்து வந்தது. அப்போது அம்மனுடைய மண் ஓட்டு திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவு கூரும் வண்ணம் இவ்வாறு முன்னோர்கள் தீப, தூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தனர்.

கோவிலில் 1957–ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்த போது அம்மனின் முத்துமாலையை மூடி இருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு கல்லினால் ஆன திருமேனி சிலாசாசனம் செய்யப்பட்டது. அன்று முதல் தினமும்  கோவில் நடை திறக்கப்பட்டு குட முழுக்காட்டு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

முத்துமாலையம்மன் சன்னிதியின் இடப்புறமும், வலப்புறமும் பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் புடை சூழ அமைந்திருக்கின்றன. இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னிதி உள்ளது.

சீதாதேவியை காணாமல் ராமரும், லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் தான் சீதா தேவியை கடத்தி சென்றான் என கூறியது. அனுமனுடன் வானரப்படைகள் சீதா தேவியை தேடிச் சென்றபோது, ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது. அனுமான் அதன் அருகே சென்று பார்த்தபோது அது சீதை தூக்கி எறிந்த முத்துமாலை என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால் இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.

முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகைகள், பார்வதி அம்மன், பிரம்ம சக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன், பைரவர், வீர பத்திரர் முதலியோருக்கு இங்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மேலும் விநாயகர், காசிநாதர், விசாலாட்சி, நவக்கிரகங்கள் ஆகியோர் இங்கு அருள்பாலிக்க, மூலவராக முத்துமாலை அம்மன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வரு கிறாள்.

திருவிழாக்கள்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும்.

ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வரு கிறது.

நோன்போ நோன்பு

ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும் அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னிதியில் இருந்து புறப்பட்டு சென்று 15–ம் நாள் ‘‘அம்மன் கொடை நோன்போ, நோன்பு’’ என கூவி கொண்டு செல்வார். அந்த 15 நாட்கள் கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவிற்கு 8 நாட்கள் முன்பாக ஆண்கள் பெரிய சாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர். பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர்.

ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன்னே திங்கட்கிழமை மாலையில் அம்மன் தங்கத்திருமேனி அலங்கார ஆபரணங்களுடன் எடுத்து சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும். அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர், சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், அம்மன் கோட்டையை வலம் வந்து வீதி உலா வருவார். ஆனி திருவிழா முடிந்து 8–ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர்.

ஆனி பெருந்திருவிழாவையொட்டி பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதம் அம்மன் கோவிலுக்கு வந்து ஆடு வெட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்வர்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

வழியும்–தூரமும்

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி–திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.

ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில், அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னிதி உள்ளது. இந்த சன்னிதி அமைய தனிக்காரணம் உண்டு. கோவில் பூசாரி மற்றும் இவ்வூர் நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றினாள். கேரளாவில் இருந்து எனது காவல் வீரன் பெரியசாமி நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலை வடிவில் மிதந்து வருகிறான். அவனை நல்ல முறையில் வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலது புறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திரு உருவை அமைத்து விடுங்கள் என அருளினாள். அம்மன் அருளாணையின்படி தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோவில் அமைத்து  வழிபட்டு வந்தனர். பெரிய சாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.

வியாதியை குணமாக்கும் சாம்பார்சாதம்

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை ‘கோவில் வீடு’ என்று அழைப்பர். இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு கூடி இருப்பர். அவர்கள் மீது பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார். அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து, அதை பனை மர ஓலையில் செய்த பட்டையில் படைப்பார்கள். இவ்வாறு படைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை உடல் நலம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம். இந்த சாம்பார் சாதத்தை பெற இன்றும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடி இருப்பதை காணலாம்.

Next Story