ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை
x
தினத்தந்தி 15 July 2017 10:00 PM GMT (Updated: 15 July 2017 7:19 PM GMT)

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை கொண்டு செல்லப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாள் விக்ரகம் அவர்களிடம் சிக்காமல் இருக்க திருப்பதியில் 40 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆடி மாதம் 1-ந் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை கொடுப்பதற்காக, நேற்று வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனைத்தும் கோவிலில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் ஒரு தட்டை யானை மீது வைத்தும், மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் கையில் எடுத்து கொண்டும் உத்தரவீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அவர்கள் வஸ்திர மரியாதைக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு நேற்று இரவு திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் ஆடி முதல் தேதியன்று(நாளை) திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை அளித்து விட்டு ஸ்ரீரங்கம் திரும்புவார்கள். இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story