குங்கிலிய தூபத்தால் மேன்மைபெற்ற கலயனார்


குங்கிலிய  தூபத்தால்  மேன்மைபெற்ற  கலயனார்
x
தினத்தந்தி 29 Aug 2017 12:30 AM GMT (Updated: 28 Aug 2017 2:21 PM GMT)

திருக்கடையூரில் பிறந்தவர் கலயன் எனும் சிவபக்தர். இத்தல ஈசன் அமிர்த கலயத்தால் ஆனவர். ஆதலால் இவருக்கு பெற்றோர் கலயன் எனப் பெயரிட்டனர்.

திருக்கடையூரில் பிறந்தவர் கலயன் எனும் சிவபக்தர். இத்தல ஈசன் அமிர்த கலயத்தால் ஆனவர். ஆதலால் இவருக்கு பெற்றோர் கலயன் எனப் பெயரிட்டனர். இவர் தன்னிடம் உள்ள செல்வத்தைக்கொண்டு அடியவர்களை உபசரித்து வந்தார். அதுமட்டுமல்ல தினமும் இத்தல அபிராமி அம்பாளுக்கும், அமிர்தகடேஸ்வரருக்கும் குங்கிலியத் தூபம் (சாம்பிராணித் தூபம்) தவறாமல் இட்டு வரும் திருப்பணியைச் செய்து வந்தார். இதுபோன்ற திருவருட் செயலால், தம் அனைத்து சொத்துகளையும் இழந்து வறுமையில் வாடினார். வறுமையில் வாடினாலும் தாம் செய்யும் தூப திருப்பணியைத் தவறாமல் செய்து வந்தார்.

ஒருநாள் கடும் பட்டினி. வீட்டில் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உண்ண உணவில்லை. கையில் பொருள் இல்லை. இதனால் ஆலயத்தில் குங்கிலிய தூபம் இடவும் வழியில்லை. பசியில் கலயனாரின் குழந்தைகள் அழுதுகொண்டே இருந்தன. குழந்தைகளின் முகம் பார்த்து வாடிய கலயனாரின் மனைவி, தன் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி கணவனிடம் கொடுத்து, ‘இதை விற்று, நெல் வாங்கி வாருங்கள்’ என்றார். தாலியை கையில் வாங்கிய கலயனார், நெல் வாங்கி வரப் போனார். ஆனால் அவரது மனம், இன்று திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கும், அபிராமி அம்மனுக்கும் குங்குலிய தூபம் காட்டமுடியவில்லையே என்ற ஏக்கத்தில் உழன்றது. அப்போது  வழியிலே ஒரு வணிகன் குங்கிலியப் பொதி (சாம்பிராணி மூட்டை) கொண்டு வருவதைக் கண்டார் கலயனார். அவனிடம் தம் மனைவியின் தாலியை விலையாகக் கொடுத்து, அதற்கு ஈடாக அந்த குங்கிலிய மூட்டை முழுவதையும் பெற்றுக்கொண்டார். பின்னர் திருக்கடையூர் ஆலயத்துக்குச் சென்று அங்கு குங்கிலியத்தை புகைய விட்டு, சுவாமியை துதித்துக்கொண்டு இருந்தார்.

இந்த இறை வழிபாட்டால் வீட்டை மறந்தார். மனைவி, குழந்தைகள் பசியால் துடிப்பதை மறந்தார். பின் தியானத்தில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் ஆலயத்தின் பிரகாரத்தில் படுத்து உறங்கிப்போனார். வீட்டில் கலயனாரின் வருகையை எதிர்பார்த்து பசியால் வாடியிருந்த அவரது மனைவியும் குழந்தைகளும் பசி மயக்கத்தில் உறங்கிப்போயினர்.

அப்போது கலயனார் மனைவியின் கனவில் வந்த ஈசன், ‘உத்தமியே! உன் கணவன் இப்போது நம் கோவிலில் உறங்கிக் கொண்டிருக்கிறான். அவன் பக்தியின் உயர்வை உலகிற்கு உணர்த்த வேண்டியே வறுமையைக் கொடுத்தோம். கையில் பொருள் இல்லாமல் குடும்பமே பசியால் வாடி வதங்கியபோதும், நீ உணவு வாங்கி வரச்சொல்லிக் கொடுத்த உனது திருமாங்கல்யத்தைக் கூட விற்று எமக்கு குங்கிலிய தூபம் காட்டி மகிழ்வித்தான். குபேரன் எமது கட்டளைப்படி இப்போதே உங்கள் இல்லத்தில் சகல வசதிகளையும், வளங்களையும் அளித்து, செல்வத்தால் நிறைப்பான். கலயனின் உண்மையான தூப சேவைக்கு, எமது அன்பு பரிசு இது. கண் திறந்து பார்’ என்று அருளி மறைந்தார்.

விழித்துப் பார்த்த கலயனாரின் மனைவியால் நம்ப முடியவில்லை. கனவில் ஈசன் கூறியதுபோல, இப்போது அவள் வீட்டில் நெல் மூட்டைகளும், பொன் மூட்டைகளுமாக குவிந்திருந்தன. அந்த நேரத்தில் ஆலயத்தில் தூங்கி கொண்டிருந்த கலயனார் திடுக்கிட்டு விழித்தார். மனைவி தாலியைக் கழற்றிக் கொடுத்து நெல் வாங்கி வரச் சொன்னது நினைவுக்கு வந்தது. வீடு நோக்கி புறப்பட்டார்.

தன்னுடைய தெருவில் வீட்டை தேடினார். வீட்டைக் காணவில்லை. அப்போது ஒரு மாளிகையில் இருந்து கலயனாரின் குழந்தையும், மனைவியும் ‘இங்கே நம் வீட்டுக்குள் வாருங்கள்’ என்று அழைத்தனர். அதிர்ந்துவிட்டார் கலயனார். ஆம்! அவரது வீடு இருந்த இடத்தில் பெரும் மாளிகை இருந்தது. அதனுள் இருந்துதான் அவரது மனைவியும் குழந்தைகளும் அவரை அழைத்தனர். வியந்தவாறே வீட்டிற்குள் சென்ற கலயனாரிடம், நடந்த அனைத்தையும் தெரிவித்தார் அவரது மனைவி.

ஆனந்தத்தின் எல்லைக்குச் சென்ற கலயனார், மீண்டும் கடவூர் ஈசனுக்கும், அன்னை அபிராமிக்கும் குங்கிலிய தூபத் திருப்பணி செய்திட வேண்டி ஆலயத்தைநோக்கி நடக்கலானார். திருக்கடையூர் சிவாலயத்தில் ஈசனுக்கும், அம்பிகைக்கும் தமது வறுமை நிலையிலும் குங்கிலிய தூபம் செய்து வந்ததால், கலயனாரை ‘குங்கிலிய கலயனார்’ என அழைத்தனர். இப்படியே பலகாலம் அவரது தூபத் திருப்பணி தொடர்ந்தது.

ஆண்டுதோறும் திருக்கடையூர் திருத்தலத்தில் ஆவணி மாதம் மூலம் நட்சத்திர நன்னாளில், குங்குலியக் கலயனார் குருபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அட்டவீரட்ட தலங்களில் திருக்கடையூர், மார்கண்டேயனுக்காக எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த ஈசன் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. இங்கு காலனை சம்ஹாரம் செய்த காலசம்கார மூர்த்தியும், அவரது உடனுறை சக்தியாக பாலாம்பிகை அம்மனும் தனிச்சன்னிதியில் அருள்கிறார்கள். இத்தல ஈசனை வழிப்படுவோருக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும். மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்றத் தலம் இது என்பதால், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் போன்றவை அனுதினமும் இங்கு நடைபெறுகிறது. இத்திருத்தலத்தில் கருவறையில் பசுநெய் சேர்த்து, குங்கிலிய தூபமிட்டு வழிபடுவது சிறப்பு. அவ்வாறு செய்தால் வாழ்வில் வறுமை, தரித்திரங்களை அகலும்.

மயிலாடுதுறையில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சீர்காழியில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலும், காரைக்காலில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது திருக்கடையூர் திருக்கோவில்.

Next Story