கருத்து வேறுபாடு நீக்கும் பெருவனம் இரட்டையப்பன்


கருத்து வேறுபாடு நீக்கும் பெருவனம் இரட்டையப்பன்
x
தினத்தந்தி 28 Nov 2017 10:03 AM GMT (Updated: 28 Nov 2017 10:03 AM GMT)

கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்களைச் சேர்த்து, மகிழ்ச்சியாக வாழ வைப்பதுடன், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான நல்வழியைக் காட்டும் கோவிலாகவும் விளங்குகிறது கேரள மாநிலம், பெருவனம் இரட்டையப்பன் கோவில்.

ருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியர்களைச் சேர்த்து, மகிழ்ச்சியாக வாழ வைப்பதுடன், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கான நல்வழியைக் காட்டும் கோவிலாகவும் விளங்குகிறது கேரள மாநிலம், பெருவனம் இரட்டையப்பன் கோவில்.

தல வரலாறு

பூரு முனிவர் அடர்ந்த வனப்பகுதியில் சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவமிருந்து வந்தார். அவருடைய தவத்தில் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் சேர்ந்து அர்த்தநாரீசுவரராக அவருக்குக் காட்சியளித்தார். அந்தக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பூரு முனிவர், “தான் கண்ட தோற்றத்திலேயே இங்கு கோவில் கொள்ள வேண்டும்” என்று இறைவனிடம் வேண் டினார்.

இறைவனும் அவருடைய வேண்டுதலை நிறைவேற்றிட அங்கு அர்த்தநாரீஸ்வரராகக் கோவில் கொள்வதாகச் சொல்லி, அவரிடம் லிங்கம் ஒன்றைக் கொடுத்து விட்டு மறைந்தார். பூரு முனிவர், இறைவன் கொடுத்த அந்த லிங்கத்தை நிலத்தில் நிறுவி வழிபடாமல், தன் கையிலேயே வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தார்.

அந்த லிங்கத்தை அபிஷேகம் செய்து வழி படுவதற்காக, அங்கு நிலத்தில் தனது கை விரல்களால் மூன்று கோடுகளைப் போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். அதனால், முனிவர் கைகளால் தொட்டுத் தோற்றுவித்த அந்தக் குளத்திற்குத் ‘தொடுகுளம்’ என்ற பெயரும் ஏற்பட்டது. அந்தக் குளத்தில் தண்ணீர் இல்லாத போது, பூரு முனிவர் போட்ட மூன்று கோடுகளைத் தற்போதும் காணமுடியும் என்கின்றனர்.

இறைவன் கொடுத்துச் சென்ற லிங்கத்தை, எப்போதும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருந்த முனிவர், அந்த லிங்கத்துக்குத் தினமும் தான் தோற்றுவித்த தொடுகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டு கொண்டிருந்தார்.

ஒரு நாள் அவர் குளிக்கச் சென்ற போது, அந்த லிங்கத்தை அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் மேல் வைத்து விட்டுச் சென்றார். அவர் திரும்ப வந்து, அந்த லிங்கத்தை எடுக்க முயற்சித்த போது, அந்த லிங்கம் அம்மரத்திலிருந்து எடுக்க முடியாமல் போனது. அதனால் வருத்தமடைந்த முனிவர், அந்த லிங்கத்தை அங்கேயே வைத்து வழிபட முடிவு செய்தார்.

அதன் பின்னர், ஆலமரத்தில் இருந்த லிங்கத்தை வழிபடுவதற்காக அவர் கீழிருந்து 24 படிகளை அமைத்தார். தான் தோற்றுவித்த தொடுகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து, அந்தப் படிகளில் ஏறிச் சென்று லிங்கத்திற்குத் தினமும் அபிேஷகம் செய்து வழிபட்டு வந்தார்.

பூரு முனிவரால் நிறுவி வழிபாடு செய்யப்பட்ட இந்தக் கோவிலுடன், பூரு முனிவர் வேண்டுதலுக்கேற்ப, அவருக்குக் காட்சியளித்த அர்த்தநாரீசுவரர் தோற்றத்திலான கோவிலும் சேர்ந்து அமைந்திருக்கிறது. இக்கோவிலைப் பரசுராமர் நிறுவி வழிபட்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது. ஒரே கோவில் வளாகத்தில் இரண்டு சிவபெருமான் சன்னிதிகள் அமைந்து இருப்பதால், இக்கோவிலை இரட்டையப்பன் கோவில் என்றே அழைக்கின்றனர்.

ஆலய அமைப்பு

மூன்றடுக்குக் கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலில் பூரு முனிவரால் நிறுவப்பட்ட சன்னிதியில் சிவபெருமான் மேற்கு நோக்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இவரைப் பூரு முனிவர் வழிபட்டது போன்று, நாமும் 24 படிகள் ஏறிச் சென்றுதான் வழிபட முடியும். இங்கிருக்கும் லிங்கம் உயரமான இடத்தில் இருப்பதால் இங்குள்ள சிவபெருமானை மாடத்திலப்பன் என்று அழைக்கின்றனர். மகாதேவர் என்று பொதுவாக அழைப்பதுமுண்டு.

பரசுராமரால் நிறுவப்பட்ட, பூரு முனிவருக்குக் காட்சியளித்த அர்த்தநாரீசுவரர் சன்னிதியில் சிறிய லிங்கத்திற்குள் பார்வதி வடிவை அமைத்து, அந்த லிங்கத்தை இணைத்துக் கொண்ட பெரிய லிங்கம் வடிவில் இறைவன் மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இந்தச் சன்னிதிக்குப் பின்புறம் பார்வதி தேவியும், அருகில் கணபதியும், தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். கோவிலின் சுற்றுப்பகுதியில் கோசாலை கிருஷ்ணன் சன்னிதி ஒன்று இருக்கிறது.

இக்கோவிலுக்குக் கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா, வடக்கே அகமாலா சாஸ்தா, தெற்கே வழுத்துக்காவு சாஸ்தா என நான்கு திசைகளிலும் நான்கு சாஸ்தாகள் காவல் தெய்வங்களாக இருக்கின்றன.

வழிபாடு

இந்த ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு, பிற சிவபெருமான் கோவில்களில் செய்யப்படும் சிவபெருமானுக்குரிய சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

இக்கோவிலில் ‘பூரம் திருவிழா’ 1400 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப் பெற்று வருகிறது. கேரளாவின் பல கோவில்களில் நடைபெற்று வரும் ‘பூரம் திருவிழா’க்கள் இங்கிருந்தே சென்றிருக்கின்றன. கேரளாவில் மிகவும் புகழ் பெற்றதாக இருக்கும் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ 200 ஆண்டுகளாகத்தான் நடத்தப் பெற்று வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

வழிபாட்டுப் பலன்கள்

திருமணத் தடையை அகற்றி, விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், குழந்தைப்பேறு வேண்டியும், கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்றுபட்டுச் சேர்ந்து வாழ வேண்டியும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் அதிகமாகச் செய்யப்படுகின்றன.

புதிய தொழில்கள் தொடங்கவும், வணிகம் பெருகவும், கல்வி, வேலைகளில் பல்வேறு சிறப்புகளைப் பெற்றிடவும் இங்கு சங்காபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். வயதானவர்கள் வாழ்வு நீடிக்க வேண்டியும், அவர்களது வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டியும் சிறப்பு வேள்வியை நடத்தி இங்குள்ள இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

அமைவிடம்

கேரளாவில் திருச்சூர் நகரிலிருந்து திருப்பிரையார் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாயம்குளங்கரா எனும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தெற்கு திசையில் 100 மீட்டர் தூரம் சென்று பெருவனம் கோவிலை அடையலாம். திருச்சூரிலிருந்து இக்கோவிலுக்குச் செல்ல நகரப்பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

- தேனி மு.சுப்பிரமணி.

Next Story