மனதில் ஏற்றுவோம் அணையா தீபம்


மனதில் ஏற்றுவோம் அணையா தீபம்
x
தினத்தந்தி 30 Jan 2018 5:09 AM GMT (Updated: 30 Jan 2018 5:09 AM GMT)

வானத்து முழு நிலவு, தன் வண்ணக் கிரகணங்களைப் பாய்ச்சி, உலகை ஒளி வெள்ளத்தில் மிதக்கச் செய்கின்ற பவுர்ணமி தினம், நாளை வருகிறது. அதுவும் தை பவுர்ணமி.

31-1-2018 தைப்பூச திருநாள்

வடலூரில் லட்லோப லட்சம் மக்கள், ஜோதியை வழிபட சத்திய ஞான சபையில் கூடுவார்கள். மாலையில் வடக்கு நோக்கி ஜோதியை வணங்கும் மக்களுக்கு வலதுபுறம் நிலவு ஒளியும், இடதுபுறம் ஞாயிறு ஒளியும், எதிர்புறம் ஜோதி தரிசனமும் கிடைக்கும். இறைவனை முக்கண்ணனாக வழிபடும் முறையாகவும் இதைக் கொள்ளலாம்.

இது பண்டைய தமிழ் மக்களின் இயற்கை வழிபாடு. வள்ளலாரின் வாக்கின்படி இந்த அருட்பெருஞ்ஜோதிதி, பலகோடி சூரியன் ஓரிடத்தில் தோன்றியது போன்ற பேரொளி கொண்டது. அருளே ஒளியாக, அருளே வடிவாக, அருள் தரும் கருணையைத் தன் தனித் தன்மையாகக் கொண்ட அளவிட முடியாத நிலைத்த இயற்கை ஒளி. உயிருள்ளவை, உயிரற்றவை இவற்றின் உள்ளும் புறமுமாய் நிறைந்த ஒளி.

விழா என்ற தமிழ்ச்சொல், ‘விழித்திருந்து செய்வது' எனப் பொருள்படும். ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி எந்தெந்த நட்சத்திரத்தில் வருமோ அந்த நாட்களெல்லாம் (சித்திரை பவுர்ணமி, வைகாசி விசாகம், கார்த்திகை தீபம், தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம்) தமிழருக்குத் திருவிழா நாட்கள். குறிப்பாக தை முதல் நாள். மார்கழி என்ற இரவின் நிறைவும், தை என்ற பகலின் தொடக்கமும் சந்திக்கும் நாள். பூமியின் சுற்றுப் பாதையில் மாற்றம் நிகழும் நாள். தை மாதத்தில் தான் சூரியன் பூமியை நெருங்கி ஸ்பரிசிக்கிறது.

வானத்து நட்சத்திரங்களில், மிகுந்த ஒளியுடைய நட்சத்திரங்கள், கார்த்திகை, பூசம், விசாகம் ஆகும். இந்த மூன்று நட்சத்திரங்களும் மொழிக் கடவுளான முருகனுக்குரியவை. ஒளியை வணங்கும் வள்ளலார், தைப் பூசத்தில் அருட்பெருஞ்ஜோதி என்னும் அணையாத தீபத்தை ஆண்டவனாக்கி, மக்களை வழிபட வேண்டினார். தாம் நிறுவிய ஞானசபைக்குள்ளே திருவிளக்கை அறிவாகிய அருட்பெருஞ்ஜோதியாகவும் அதற்கு எதிரே உள்ள கண்ணாடியை மனமாகவும், அதற்கு எதிரே ஏழு திரைகளை மன மாயையாகவும் அமைத்துள்ளார். ஜீவகாருண்யத்தாலும், அருள் வழிபாட்டாலும் மனமாகிய கருங்கற் பாறை கசிந்து உருக, மாயைத் திரள்கள் ஏழும் ஒன்றின் பின் ஒன்றாக நீக்கப்பட்டு மனம் தூய்மையான கண்ணாடி போல் விளங்கும். அதன் வழியே அறிவாகிய அருட்பெருஞ்ஜோதி தரிசனம் கண்டு, ‘மரணமில்லாப் பெருவாழ்வு’ அடைந்து பேரின்பம் பெறலாம்.

வடலூரின் தைப்பூச நாள், ஓர் உலக ஒளி வழிபாடு தினமாகும். வள்ளலார் ஓர் ஆன்மிக ஞானி. அதாவது அக விஞ்ஞானி. அவர் முருகனையும், சக்தியையும், பின்னர் நடராஜரையும் வழிபட்டு, தன் அனுபவத்தின் உச்ச நிலையில் அருவ உருவமாகிய அருட்பெருஞ்ஜோதியை வழிபட்டதற்குப் பல காரணங்கள் உண்டு. ஜோதி என்பது அளவுட முடியாத ஒளி. ஒளி என்றால் நெருப்பு என்றும் பொருள்படும். நெருப்பு ஒரு பொருளைத் தூய்மைப்படுத்தும் போது, தண்ணீரைப் போல் அழுக்கடையாமல் தூய்மைப்படுத்தும். ஏழு வண்ணங்கள் இணைந்து உருவாகும் வெண்ணிற ஒளி போல எல்லா மனங்களையும், மதங்களையும் இணைக்கிறது வள்ளலாரின் சமசர சன்மார்க்க சத்திய ஜோதி. வள்ளலார் வணங்கிய வெண்மை ஒளி மனத் தூய்மையைக் குறிக்கும். வெண்ணிறக் கொடியும், வெண்புறாவும் சமாதானச் சின்னங்கள், வெண்மை ஒளி சமாதானத்தின் முன்னோடி.

கண்ணை மறைப்பது புற இருள், கருத்தை மறைப்பது அக இருள். அக இருள் கல்வி இன்மையாலும், கல்வி இருந்தும் இறையுணர்வு இல்லாததாலும் வரலாம். அருட்பெருஞ்ஜோதி என்னும் அறிவொளி, இவ்வகை இருளை அகற்றும். விஞ்ஞான ரீதியில் பார்த்தால் ஒளி தாவரங்களில் குளோரோபில்லை உண்டாக்கி உணவாகிறது. ஒளி தரும் நெருப்பு, உணவைச் சமைக்கிறது. ஒளியின் அங்கமான எக்ஸ்ரே கதிர், நோயைக் கணிக்கிறது. கதிரியக்கம் புற்றுநோயைக் குணப்படுத்துகிறது. ஒளிக் குவியல் (லேசர்) அறுவை சிகிச்சை செய்கிறது. ஒளியில்லாத அறையில் நீண்ட நாள் வாழும் மனிதருக்குப் பைத்தியம் பிடிக்கிறது. எனவே, ஒளியில்லாமல் மனித வாழ்வு இல்லை. ஒளி, மனித வாழ்வின் உயிர் ஆகும்.

வள்ளலாருக்கு முன் தோன்றிய அருளாளர்களும், இறைவனை ஒளி வடிவனாகவே கண்டனர். ‘உணர்தற்கரியதோர் சோதியானை’ என்று திருநாவுக்கரசரும், ‘அறிவரிய சோதியானே’ என்று திருஞானசம்பந்தரும், ‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி’ என்று மணிவாசகரும், ‘பேரொளியாய் பெருஞ்சுடராய்’ என்று திருமூலரும், ‘நந்தாசோதி’ என்று பட்டினத்தாரும் பாடியது வள்ளலார் கூறும் அருட்பெருஞ்ஜோதியைத் தான்.

‘அருளாளர் வருகின்ற தருணமிது தோழி

ஆயிரம் ஆயிரம் போடி அணிவிளக்கு ஏற்றிடுக’ என்று அனைவரையும் வள்ளலார் அழைக்கிறார்.

மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் சுடர் குடியேறினால் அது புனிதம் பெறுகிறது; அதை வணங்கு கிறோம். உடம்பும் மண் பாண்டமே. விளக்கு தீபம் இயல்பாக எரியும் போது, தீப ஒளியில் மூன்று விதமான சுடர்களைப் பார்க்கிறோம். உள் கருநீலம், சிவப்பு நிறம், அதன் மேல் மஞ்சள் நிறம். இதுபோல் நம் தேகத்தில் விளங்கும் ஜோதியுள் மூன்று நிலைகள் உண்டு. ஒளி ஜீவனாகவும் (நட்சத்திரப் பிரகாசம்), உள்ளொளி ஆன்மாவாகவும் (சூரியப்பிரகாசம்), உள்ளொளியின் ஒளி (கடவுள் பிரகாசம்) என விளங்குகிறது. உடம்பாகிய மண் பாண்டத்தைத் தூய்மையாக்கி, ஒழுக்கம் என்ற எண்ணெய் ஊற்றி, உயிர் இரக்கம் என்ற திரியிட்டு, நமது உயிர் விளக்கை ஏற்றினால், நாமே இறைவனாவோம். இதுவே அத்வைத ஞானம்.

உயிர் நெருப்பின் சூடு எல்லோரிடமும் இருக்கிறது. இந்தத் தைப்பூசத் திருநாளில், உயிரிரக்க நெருப்பின் ஒளியை, அருள்நெறி என்னும் பெருநெறியாகிய தீக் குச்சியைக் கொண்டு ஏற்றுவோம்.

அருட்பெருஞ்ஜோதி என்ற அணையா தீபம் மனக் கோவிலில் எழுந்தருள, உலகமெங்கும் வள்ளலாரின் மகாமந்திரம் ஒலிக்கட்டும்.

- முனைவர் பி.கி.சிவராமன்

Next Story