ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா


ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 1 Feb 2018 11:30 PM GMT (Updated: 1 Feb 2018 9:15 PM GMT)

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

ஆனைமலை,

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமாக ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலின் குண்டம் திருவிழா கடந்த மாதம் 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 30-ந் தேதி ஆழியாற்றங்கரை மயானத்தில் நள்ளிரவில் மயான பூஜை நடைபெற்றது.

மயான பூஜையின்போது பிடி மண் எடுத்து வந்து உப்பாற்றங்கரையில் சிறப்பு பூஜை செய்து சக்தி கும்பஸ்தாபனம் செய்யப்பட்டு கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மகாஅபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.

அம்மன் வீதி உலா

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் பொள்ளாச்சி டாப்சிலிப் சாலையில் உள்ள குண்டம் மைதானத்தில் 51 அடி நீள குண்டம் கட்டப்பட்டது. மாலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 5 மணிக்கு நடை சாத்தப் பட்டது.

பின்னர் சிறப்பு பரிகார பூஜை செய்து இரவு 9 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சித்திரத்தேர் வடம் பிடிக்கப்பட்டு அம்மன் திருவீதி உலா தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சித்திர தேர்குண்டம் மைதானத்தை வந்தடைந்தது. இரவு 10.30 மணியளவில் சிறப்பு பூஜையுடன் குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

விரதம் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 50 டன் விறகுகளை குண்டத்தில் போட்டு குண்டம் வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணிக்கு குண்டம் பூ தயாரானது. அதன் பின்னர் குண்டம் வாயிலில் மா இலை தோரணம் கட்டப்பட்டது. இதே நேரத்தில் மாசாணியம்மன் கோவில் உற்சவ மூர்த்திக்கு வெண்ணெய் காப்புசாத்தி சிறப்பு பூஜை நடந்தது.

பக்தி கோஷம்

பின்னர் கோவில் அர்ச்சகர்கள் குழுவினர் அம்மன் அருளாளி குப்புசாமி, மயான அருளாளி அருண் மற்றும் பக்தர்கள் புடைசூழ, பேழை பெட்டியில் பூஜை பொருட்களுடன் உப்பாற்றங்கரைக்கு சென்றனர். அங்கு குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டி விரதம் இருந்த பக்தர்களுக்காக அம்மனை வேண்டி சிறப்பு பூஜை செய்யப் பட்டது.

குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு செவ்வரளி மாலை அணிவிக்கப்பட்டது. இதையடுத்து பேழை பெட்டி முன்செல்ல விரதமிருந்த பக்தர்கள் மங்கல வாத்தியம் முழங்க சங்கு சேகண்டி இசையுடன் காலை 8.30 மணிக்கு குண்டத்தை வந்தடைந்தனர். அப்போது கருடன் வானில் வட்டமிட்டது. பக்தர்கள் மாசாணித்தாயே மாசாணித்தாயே மயான பீட நாயகியே‘ என மனமுருக பக்தி கோஷமிட்டனர்.

குண்டத்தில் இறங்கினர்

பின்னர் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் தலைமை முறைதாரர் மனோகரன், இதையடுத்து அம்மன் அருளாளி குப்புசாமி குண்டம் இறங்கி சித்திர தேரில் வீற்றிருந்த மாசாணியம்மனை வழிபட்டனர்.

பின்னர் விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விரதமிருந்த பெண்கள் கைகளால் குண்டம் பூவை அள்ளிப்போட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி, கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., பொள்ளாச்சி சப்- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம், பொள்ளாச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், ஆனைமலை ஒன்றிய செயலாளர் சுந்தரம், கார்த்திக் அப்புசாமி, நகர செயலாளர்கள் கோட்டூர் பாலு, ராஜேந்திரன் கூட்டுறவு சங்க இயக்குனர் மகாலிங்கம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

இதனை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு கொடி இறக்குதல், 10.30 மணிக்குமஞ்சள் நீராடல், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜை ஆகியவை நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு மகாஅபிஷேக நிகழ்ச்சியுடன் குண்டம் விழா நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஆனந்த், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்து இருந்தனர். விழாவையொட்டி 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கூட்டுறவு சங்க தலைவர் திருமலைசாமி, கோட்டூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் பூங்கோதை துரைசாமி நகர இளைஞர் அணி செயலாளர் துரை சாமி, கூட்டுறவு சங்க இயக்குனர் மகாலிங்கம், நகர செயலாளர் கோபால் துரை, ஒன்றிய பாசறை செயலாளர் சிவபிரகாஷ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

பாதுகாப்பு ஏற்பாடுகளை வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியம் தலைமையில் 550 போலீசார் மேற்கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திர மோகன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். ஆனைமலை முக்கோணம் பகுதியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளில் இருந்தும் வந்த வாகனங்களின் வருகை கண்காணிக்கப் பட்டது.

மேலும் 20 கண்காணிப்பு கேமரா மற்றும் ஹெலிபேட் கேமிரா மூலம் குண்டம் மைதானம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. ஆனைமலை வட்டார மருத்துவ அலுவலர் சதீஷ்குமார்தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் முதலுதவி மருந்துகளுடன் தயார் நிலையில் இருந்தனர். இதுபோன்று பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய ஊழியர்களும் தீத்தடுப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

குண்டத்தில் வீசிய பூ பந்தும், எலுமிச்சை பழமும் கருகவில்லை

தகதகவென தயாராக இருந்த பூக்குண்டத்தில் பக்தர்கள் இறங்க முதலில் அம்மன் அருள் வேண்டப்பட்டது. குண்டம் இறங்கும் முன் முதலில் தலைமை முறைதாரர் மனோகரன் குண்டம் வாயிலில் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் மல்லிகை பூப்பந்தை குண்டத்தில் உருட்டி விட்டார். மல்லிகை பூப்பந்து குண்டத்தில் உருண்டு மறுகரைக்கு கருகாமல் அப்படியே வந்தது. இதையடுத்து அம்மன் அருளாளி குப்புசாமி எலுமிச்சை பழத்தை குண்டத்தில் உருட்டி விட்டார். அதுவும் கருகாமல் நிறம் மாறாமல் அப்படியே இருந்தது. அப்போது பக்தர்கள் வான் அதிர பக்தி கோஷமிட்டனர்.

குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இது குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பது ஐதீகம். மேலும், குண்டம் இறங்கிய பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூசாரிகள் அம்மனுக்கு சாத்தப்பட்டு இருந்த வெண்ணையை பிரசாதமாக வழங்கினர்.

Next Story