கார்த்திகை தீபம் காணும் விஷ்ணு ஆலயம்


கார்த்திகை தீபம் காணும் விஷ்ணு ஆலயம்
x
தினத்தந்தி 14 Jun 2018 10:15 PM GMT (Updated: 14 Jun 2018 7:11 AM GMT)

பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்றருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி அருகில் இருக்கிறது திருக்கடித்தானம் (திருக்கொடித்தானம்). இங்குள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.

தல வரலாறு

இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.

அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.

அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.

அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.

அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.

உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.

அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.

இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.

பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக் கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.

மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.

கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.

கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இப்பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார். அவர் வந்த வேளையில் கோவில் நடை மூடப்பட்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த வாயிற்காப்பாளன் வந்திருப்பது அரசர் என்று தெரியாமல், அவரிடம் சிறிது பணம் பெற்றுக் கொண்டு, கோவில் நடையைத் திறந்துவிட்டானாம். அதனால் அந்த வாயிற்காப்பாளன் கழுமரத்தில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். அதை நினைவுபடுத்தி எச்சரிக்கும் நோக்கத்தில் இங்கு கழுமரத்தில் மனிதன் படுத்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

வழிபாடுகள்

ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திரு வோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.

இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்றருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.

வழிபாட்டுப் பலன்கள்

இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.

அமைவிடம்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

-தேனி மு.சுப்பிரமணி 

Next Story