கன்னியாகுமரி சுசீந்திரம் கோவிலில் ஆவனத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கன்னியாகுமரி சுசீந்திரம் கோவிலில் ஆவனத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 14 Sep 2018 6:31 PM GMT)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆவணித்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சுசீந்திரம்,

பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை தெப்பத்திருவிழாவும், மார்கழிப் பெருந்திருவிழாவும், மாசி திருக்கல்யாண திருவிழாவும் தாணுமாலயசாமிக்கு நடைபெறுகிறது.

ஆவணி மாதத்திருவிழா மூலவராகிய தாணுமாலயனை அடுத்துள்ள திருவேங்கிட விண்ணவப்பெருமாளுக்கு நடைபெறுகிறது. இக்கோவிலில் இருகொடிமரங்கள் உள்ளது. சித்திரை மற்றும் மார்கழி திருவிழாவின்போது தாணுமாலயசாமி சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்படும். ஆவணித்திருவிழாவின்போது திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம், காலை 9.45 மணிக்கு திருவேங்கிட விண்ணவப்பெருமாள் சன்னதியில் இருந்து மேளதாளத்துடன் கொடிப்பட்டத்தை எடுத்துவந்து சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ கொடியை ஏற்றினார். அதைதொடர்ந்து கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

 நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் அன்புமணி, வட்டபள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண்மடம் திலீபன் நம்பூதிரி, சுசீந்திரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகேஷ், திருக்கோவில் பணியாளர்கள், பக்தர் சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருவிழாவையொட்டி தினமும் காலை 8.00 மணிக்கும், இரவு 7.00 மணிக்கும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும் பெருமாளும் எழுந்தருளி விதவிதமான வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனைகள் ஆகியவை நடக்கிறது.

9–ஆம் திருவிழாவான வருகிற 22–ந்தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய இரண்டு அம்பாளும், பெருமாளும் அலங்கரிக்கப்பட்ட இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் எழுந்தருளச் செய்து நான்கு ரதவீதிகள் வழியே மேளதாளங்கள் முளங்க கோலாகலமாக பக்தர்கள் இழுத்து வருவார்கள்.

10–ஆம் திருவிழாவான 23–ந் தேதி பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி விஷ்ணுபகவான் அதிகாலை 4.00 மணியளவில் பசு கன்றுகுட்டி முகத்தில் விழித்து எழுதல், தொடர்ந்து 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

 இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Next Story