கைரேகை அற்புதங்கள் : வழக்குகளில் வெற்றி யாருக்கு?


கைரேகை அற்புதங்கள் : வழக்குகளில் வெற்றி யாருக்கு?
x
தினத்தந்தி 9 Nov 2018 10:03 AM GMT (Updated: 9 Nov 2018 10:03 AM GMT)

செவ்வாய் தசைக்கு அடுத்தபடி, ராகு தசை 18 வருடங்கள், மனிதனின் வாழ்க்கையில் அமைகிறது. பலம் மிகுந்த ராகு தசையில், ஒரு ஜாதகருக்கு வாழ்க்கையில் திடீர் வளர்ச்சியும், முன்னேற்றமும், வெற்றியும் தரும்.

நீண்ட காலத்துக்கு அனுபவிக்கக் கூடிய வகையில் அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவது ராகு தசை. தென் மேற்கு திசையில் இருந்து அவர்களுக்கு நலம் உண்டாகும். சுபாவத்தில் ராகுவானவர் பாவக் கிரகம் என்றாலும், ஜாதகத்தில் துர்ஸ்தானத்தில் மறையாமல் அமைந்து இருந்தால், அவரிடம் இருந்து அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

ராகு, விருச்சிகத்தில் உச்சம் பெற்று அமைந்திருந்தால் ராகு திசை காலம் மிகவும் சிறப்பாக அமையும். நிலபுலன்கள் சேர்க்கை, அரசாங்கத்தால் கவுரவம், உற்றார் உறவினர் மூலம் உதவிகள் போன்றவை கிடைக்கும். உங்களைப் பகைத்த உறவினர்கள், பகையை மறந்து திரும்ப வந்து இணைவார்கள். மேலும் நீதிமன்றத்தில் உங்கள் மீதான வழக்கு பலமாக இருந்து வந்தால், அதை முறியடித்து வழக்கை உங்களுக்கு சாதகமாக மாற்றுவார். வழக்கு தொடர்ந்தவர், உங்களிடம் சரணாகதி அடைவது நிச்சயம்.

அதே நேரம் ராகு, விருச்சிக ராசியில் உச்சம் பெறும் போது, செவ்வாயின் ஆதிக்கம் ராகுவுக்கு ஏற்பட்டு, மனைவிக்கு சில சங்கடங்களை நடத்த வாய்ப்புண்டு. பெண்களால் செலவு, தொடர்பு போன்ற பாப செய்கைகள் ஜாதகருக்கு உண்டாகும். ராகு அரசாங்க கிரகம் என்பதால், அரசு சலுகைகள் கிடைக்கும். 7-ல் ராகு அமைந்தால் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு. இரு தாரங்கள் கூட அமையலாம். 7-ல் ராகு அமைந்த ஜாதகருக்கு, 7-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன் அமையுமோ, அந்த பலன்களைக் கொடுப்பார். 8-ம் பார்வையாக செவ்வாய், ராகுவை பார்ப்பது சிறப்பு நிலை ஆகும்.

இனி கைரேகைப்படி ராகு, களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் விருச்சிக ராசியில் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும் என்பதைப் பார்க்கலாம். ராகு மேட்டில் இருந்து ஒரு ரேகை மேல் நோக்கிச் சென்றால், அவர் தைரியசாலியாக திகழ்வார். ராகு மேட்டில் இருந்து பல ரேகைகள் மேல் நோக்கிச் சென்றால், அந்த நபர் பெரும் கோபக்காரராக இருப்பார். ராகு மேட்டின் மேல் பாகத்தில் சதுரக்குறி அமைந்திருந்தால், அரசாங்க விருது கிடைக்க வாய்ப்புண்டு. முக்கோண வடிவம் இருப்பின் உழைப்பில்லாத வருவாய் வந்து சேரும். சுக்ர மேட்டை சார்ந்த ராகு மேடு அமைந்தால், பெண்களின் தொடர்பு உண்டாகும். சனி மேட்டை சார்ந்த ராகு இருப்பின், பிறரை ஏமாற்றுவதில் கில்லாடியாக திகழ்வார்கள். ராகு மேட்டில் முக்கோணம் அமைந்து பிளவுடன் தென்பட்டால், வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்யும் யோகம் வாய்க்கும்.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Next Story