விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள்

நாம் நினைத்தது நிறைவேறவும், நிம்மதி கிடைக்கவும் பொருளாதார நிலை உயரவும் இறைவனை நினைத்து விரதம் இருக்கின்றோம்.
நாம் இருக்கும் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் இறையருள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். விரதம் இருக்கும் நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பன வருமாறு:-
1) கோபப்படுதல் கூடாது.
2) விரதத்திற்கு முதல் நாளே வீட்டை மெழுகிக் கோலம் போட வேண்டும்.
3) பூஜை அறையைப் புனித அறையாக மாற்ற வேண்டும்.
4) எந்த தெய்வத்தின் அனுகிரகம் வேண்டி விரதம் இருக்கிறோமோ அந்த தெய்வப்படத்தை ஆனைமுகப்பெருமான் படத்திற்கு பக்கத்தில் வைக்க வேண்டும்.
5) ஐந்து முக விளக்கு ஏற்றி கவச பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
6) பெண்கள் வீட்டிற்கு விலக்கானால் எட்டு நாட்கள் கழித்துத் தான் விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
7) விரத நாட்களில் தம்பதிகள் தாம்பத்ய உறவைத் தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக விரத காலத்தில் 24 மணி நேரமும் இறை சிந்தனையோடு இருப்பது நல்லது.
சந்திர பலம் குறைந்தால் என்ன நடக்கும்?
ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
மனக்குழப்பம் ஏற்படும், மாதுர் தோஷம் உருவாகும். தாய்வழி ஆதரவு குறையும். நீர் சம்மந்தப்பட்ட வியாதி ஏற்படும். அயல்நாட்டு பயண வாய்ப்பில் தடை ஏற்படும். மாமன், மைத்துனர்களின் ஒத்துழைப்பு குறையும்.
இந்த நிலைமாற திங்கட்கிழமை அல்லது ரோகிணி நட்சத்திரத்தன்று சந்திர கவசம் பாடி இறைவனை வழிபடுவது நல்லது.
பிறந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
ஆண்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் புது முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய வழிபாடுகளை மட்டும் வைத்துக்கொள்ளலாம்.
பெண்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் வழிபாடுகளை வைத்துக்கொள்வதோடு, மற்ற சில காரியங்களும் செய்யலாம். அவை: கல்வி கற்கத் தொடங்கலாம், குழந்தைகளுக்குச் சோறு ஊட்டும் விழா நடத்தலாம், தாய்வழி உறவினர்களின் உதவி கேட்கலாம், சாந்தி முகூர்த்தங்கள் வைக்கலாம்.
ஜாதகத்தில் செவ்வாய் பலம் இருந்தால்...
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் பெற்றோ, ஆட்சி பெற்றோ இருந்தால் தலைமைப் பதவிகள் தானாக வந்து சேரும். எதிரிகள் உதிரிகளாவர். உடன்பிறப்பின் மூலம் உங்கள் கடன்சுமை குறையும். ரியல் எஸ்டேட், வீட்டு உபயோகப் பொருட்கள், மருந்து, மரம் ஆகிய துறைகளில் தொழில் புரிவோர் நல்ல லாபம் குவிப்பர்.
செவ்வாய் பலம் பெற அங்காரகன் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. அங்காரக கவசம் பாடி வழிபட்டால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.
தொட்ட காரியங்களில் வெற்றி பெற துளசியை வழிபடுவோம்
வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. எந்த இடத்தில் துளசி செடி வளர்கின்றதோ, அந்த இடமெல்லாம் சகல தேவதைகளும் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றார்கள். துளசியை வழிபட்டால் துயரங்கள் தீரும், இல்லத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
துளசி இலைகளைச் சாப்பிட்டால் நோய்கள் குணமாகும். துளசியில் மகிமை ஏராளம் உள்ளது.
கிரகங்களுக்குரிய வாகனங்கள்
சூரியன்: மயில், தேர்
சந்திரன்: முத்துவிமானம்
செவ்வாய்: அன்னம்
புதன்: குதிரை
குரு: யானை
சுக்கிரன்: கருடன்
சனி: காகம்
ராகு: ஆடு
கேது: சிங்கம்
தொகுப்பு: ‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
Related Tags :
Next Story