நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்


நுண்ணறிவு தரும் சரஸ்வதி யோகம்
x
தினத்தந்தி 26 April 2019 6:24 AM GMT (Updated: 26 April 2019 6:24 AM GMT)

வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பல விஷயங்களை அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள்

ஒருவரது சுய ஜாதகத்தில் தனகாரகன் ஆகிய குரு, களத்திரகாரகன் ஆகிய சுக்ரன், வித்யாகாரகன் ஆகிய புதன் ஆகிய மூன்று கிரகங்களும் லக்னம், 2, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இணைந்தோ அல்லது தனித்தனியாக இருந்தாலோ அது சரஸ்வதி யோகம் ஆகும்.

இந்த யோகத்தை ஜோதிட நூல்கள் விசேஷமான ஒன்றாக குறிப்பிட்டுள்ளன. காரணம், இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பல்வேறு கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெயரின் தன்மைக்கேற்ப இந்த யோகத்தால் நல்ல கல்வியும், இயல், இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் பயிற்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தேவைக்கேற்ப செல்வத்தை அடைவதுடன், சமுதாயத்தில் அனைவரும் மதிக்கும் கவுரவமான நிலையையும் பெறுவார்கள்.

கல்விக்கு அதிபதி புதன், கலைகளுக்கு அதிபதி சுக்ரன், அருளை அள்ளி வழங்கும் குரு ஆகிய மூன்று இயற்கை சுபர்களும் ஒரே ராசியில் (6,8,12 தவிர) இருக்கும் நிலையில் இந்த யோகம் முழுமையாக செயல்படும் என்பது பல ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும். இளம் வயதிலிருந்தே பெரியவர்களுக்கு மரியாதை மற்றும் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறைகளை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி தவிரவும் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பல விஷயங்களை அவர்களாகவே கற்றுக்கொள்வார்கள். சராசரி பொருளாதார நிலை கொண்ட குடும்பங்களிலேயே இந்த யோகம் கொண்டவர்கள் பிறப்பதாகவும் ஜோதிட ரீதியான நம்பிக்கை உள்ளது.


Next Story