முருகப்பெருமானும்.. 16 வடிவங்களும்..


முருகப்பெருமானும்.. 16 வடிவங்களும்..
x
தினத்தந்தி 29 Oct 2019 2:30 AM GMT (Updated: 28 Oct 2019 4:54 AM GMT)

முருகனை ஆறுமுக கடவுளாக மட்டும்தான் நமக்குத் தெரியும். ஆனால், முருகன் தன்னுடைய வடிவங்களுக்கு ஏற்ப, 16 பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு வடிவத்தையும் வழிபட்டால் பலன்கள் வேறுபடுகின்றன. முருகப்பெருமானின் 16 வடிவங்களையும், அவற்றை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.

ஞானசக்திதரர்: ஞான சக்திதரர் முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகை மலையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்' திருக்கோலமாகும்.

கந்தசாமி: கந்தசாமியை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவனின் திருவடிவம் இது.

ஆறுமுக தேவசேனாபதி: ஆறுமுக தேவசேனாபதியை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலை ஆண்டவர் திருக்கோவிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

சுப்பிரமணியர்: சுப்பிரமணியர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி, ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி முருகன் கோவில் மூலவர் சுப்பிரமணியர் ஆவார்.

கஜவாகனர்: கஜவாகனரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் கஜவாகன முருகப்பெருமானை வழிபாடு செய்யலாம்.

சரவணபவர்: தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர் சரவணபவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

கார்த்திகேயர்: கார்த்திகேயரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிலும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

குமாரசாமி: இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

சண்முகர்: சண்முகரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

தாரகாரி: `தாரகாசுரன்' என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி வடிவத்தை தரிசிக்கலாம்.

சேனானி: இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

பிரம்ம சாஸ்தா: பிரம்ம சாஸ்தா என்றும் முருகனை வழிபடுகிறோம். இவரை வழிபட்டால் எல்லா வகை வித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

வள்ளி கல்யாணசுந்தரர்: திருமணம் கைகூடுவதற்கும் முருகனின் வழிபாடு உண்டு. வள்ளி கல்யாண சுந்தரரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

பாலசுவாமி: இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் கும்பம் கோவில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறுங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உண்டு.

சிகிவாகனர்: ‘சிகி’ என்றால் மயில். மயிலை வாகனமாகக் கொண்டவர் முருகப்பெருமான். மயில் மீது இருக்கும் முருகனின் அருட்கோலத்தையே, ‘சிகிவாகனர்’ என்கிறோம். ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம் இதுவாகும். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.

-  பொ.பாலாஜி கணேஷ்

Next Story