திருக்கார்த்திகை திருநாள் வழிபாடு


திருக்கார்த்திகை திருநாள் வழிபாடு
x
தினத்தந்தி 8 Nov 2019 11:21 AM GMT (Updated: 8 Nov 2019 11:21 AM GMT)

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத் தினத்தையே ‘திருக்கார்த்திகை’ என்று அழைக்கிறோம்.

வ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத் தினத்தையே ‘திருக்கார்த்திகை’ என்று அழைக்கிறோம். அந்தநாளில் கார்த்திகேயனை நினைத்து விரதமிருந்து வழிபடுவதன் மூலம், செவ்வாய் தோஷம் நீங்க வழியமைத்துக் கொள்ளலாம். செவ்வாய்க்குரிய தெய்வம் முருகப்பெருமான் மற்றும் சக்தி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. எனவே செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் அச்சமின்றி வாழ, முருகப்பெருமான் வழிபாட்டையும், சக்தி வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் உடனடியாக நற்பலன்கள் கிடைக்கின்றன. அதற்குரிய விதத்தில் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் சக்தி வழிபாட்டினை மேற்கொண்டு, அதன்பிறகு அடுத்து வரும் கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமான் வழிபாட்டைமேற்கொள்ளவேண்டும்.

இடையில் வரும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழாவையும் கண்டு மகிழ்ந்து விரதம் இருந்து, அன்றைய தினமும் முழு நாளும் கந்தப் பெருமானின் சிந்தனையோடு இருந்து வந்தால் தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷம் வந்து சேரும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த அடிப்படையில் இந்த வருடத்திற்கான திருக்கார்த்திகை திருநாள் வருகிற 10-12-2019 (செவ்வாய்க்கிழமை) வருகிறது. அன்றைய தினம் முருகப்பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் திருமணத் தடை அகலும். செல்வநிலை உயரும். வாழ்க்கை வசந்தமாகும்.

பாவங்களைப் போக்கும் பரணி தீப வழிபாடு

மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். அங்ஙனம் நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் பலர் அடியெடுத்து வைக்கின்றனர். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்றுவீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெய்யிலும், முருகன் முன்னிலையில் இலுப்பை எண்ணெய்யிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள். ஐஸ்வரியம் பெருகும். அன்றைய தினம் பிரதோஷமும் வருகின்றது. எனவே நந்தியெம்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் இல்லத்தில் நல்லகாரியம் நடைபெறும். மேலும் கார்த்திகை திங்கட்கிழமையில் வரும் சோமவாரம் சிறப்பு மிக்கது என்பதால், அன்றைய தினம் சிவாலயங்களில் சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். எனவே பரணிதீபம், பிரதோஷம், சங்காபிஷேகம் ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெறும் நாளில் ஆலய தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து நலன்களும் வந்து சேரும்.

சிவல்புரி சிங்காரம்

Next Story