நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது


நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது
x
தினத்தந்தி 26 Nov 2019 11:53 AM GMT (Updated: 26 Nov 2019 11:53 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.

ஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த ஒரு பகுதியாக உள்ளது. அதை நிறைவேற்றுவதற்கு உடல் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

இஸ்லாத்தை பொறுத்த அளவில் நேர்த்திக்கடன் என்பது ஒரு வணக்கம். எல்லா வணக்கங்களும் இறைவனுக்கு மட்டுமே இணக்கம். அந்த வகையில் நேர்த்திக்கடனை இறைவனுக்கு மட்டுமே உரித்தாக்கி நிறைவேற்றிட வேண்டும். மற்ற யாருக்காகவும் நேர்ச்சை செய்யக்கூடாது. நேர்த்திக்கடனை நிறைவேற்றவும் கூடாது.

இது இறை நம்பிக்கையின் ஒரு அங்கமாக இருப்பதால் இதில் மற்றவர்கள் அங்கம் வகிக்க முடியாது. இதற்கு பின்வரும் வசனங்கள் சான்று:

“இம்ரானுடைய மனைவி (கர்ப்பமான பொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘என் இறைவனே, நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்து விட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக்கொள்வாயாக’ என்றாள்”. (திருக்குர்ஆன் 3:35)

‘நம்பிக்கையாளர்களில் இத்தகையவர்களும் உள்ளனர். இறைவனிடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் அதற்கான நேரத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்’. (திருக்குர்ஆன் 33:23)

“நீங்கள் உண்டு, பருகி மன நிறைவடைவீராக. மனி தர்களில் எவரையேனும் கண்டால் ‘நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்துவிட்டேன். எந்த மனிதனுடனும் பேசமாட்டேன்’ என்று கூறுவீராக”. (திருக்குர்ஆன் 19:26)

‘நேர்த்திக்கடன் இருவகை. 1) எவர் இறைவனுக்கு கட்டுப்படும் விஷயத்தில் நேர்ச்சை செய்தாரோ அது இறைவனுக்கு உரியது, அதை நிறைவேற்றுவது அவசியம். 2) எவர் பாவம் புரியும்படி நேர்ச்சை செய்தாரோ அது சைத்தானுக்கு உரியது. அதை நிறைவேற்றுவது அவசியமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூசைன் (ரலி), நூல்: நஸயீ)

நன்மையும் இல்லாத, பாவமும் இல்லாத வீணான நேர்ச்சைகளும் உண்டு. இவற்றையும் நிறைவேற்றத் தேவையில்லை. தமக்கு உரிமையே இல்லாதவற்றிலும் நேர்ச்சை செய்யக்கூடாது.

நன்மை பயக்கும் நேர்ச்சைகள்

‘மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாப் (தங்கி) இருப்பதாக அறியாமைக்காலத்தில் உமர் (ரலி) நேர்ச்சை செய்திருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘உமது நேர்ச்சையை நிறைவேற்றும்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

“ஜூஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து, அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டதற்கு, ‘ஆம், செய்யலாம்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

“சஅத்பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘நேர்ந்து கொண்டு அதை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக் கடன் குறித்து’ விளக்கம் கேட்டார்கள். ‘அதை நிறைவேற்றுமாறு’ நபி (ஸல்) தீர்ப்பளித்தார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

தேவையற்ற நேர்ச்சைகள்

``ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக்கொண்டிருக்க அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘கஅபா வரை நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்’ என்று மக்கள் கூறினார்கள். ‘இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வது இறைவனுக்குத் தேவையற்றது’ என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச்செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

“உக்பா பின் ஆமிர் (ரலி) கூறுகிறார்: ‘என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர் இதுபற்றி நபிகளாரிடம் தீர்ப்பு பெற்றுத்தரும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அவர் சிறிது தூரம் நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும்’ என்றார்கள்”. (நூல்: புகாரி)

‘ஒரு தடவை அபூபக்ர் (ரலி) ‘அஹ்மஸ்’ எனும் குலத்துப் பெண்மணியான ஸைனப் வசம் சென்றார்கள். அவள் மவுன விரதம் பூண்டு பேசாமலிருப்பதாகக் கண்டார்கள். உடனே, ‘இவளுக்கென்ன ஆயிற்று?, ஏன் பேசாமல் இருக்கிறாள்?’ என்று விசாரித்தார்கள். அதற்கு மக்கள் ‘இவள் ஹஜ் செய்யும் வரை எவருடனும் பேசமாட்டேன் என நேர்ச்சை செய்திருக்கிறாள்’ என்று கூறினார்கள். அவளிடம் அபூபக்ர் (ரலி) ‘நீ பேசு, ஏனெனில் இவ்வாறு மவுனமாக இருப்பது அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. இது அறியாமைக் காலச்செயலாகும்’ என்றார்கள். உடனே அவள் மவுனத்தை கலைத்துப்பேசினாள்”. (அறிவிப்பாளர்: கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்), நூல்: புகாரி)

‘நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து மக்களிடம் கேட்டார்கள். மக்கள், ‘இவர் அபூஇஸ்ராயீல் ஆவார். இவர் நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில்தான் இருப்பேன்) என்றும், யாரிடமும் பேசமாட்டேன், நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்து கொண்டார்’ என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘அவருக்கு உத்தரவிடுங்கள்; அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை மட்டும் நிறைவு செய்யட்டும்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

ஒருவர் தமக்கு உடமையில்லாத ஒன்றிலும், பாவச் செயலிலும், இறைவனுக்கு மாறுசெய்வதிலும் நேர்ச்சை செய்யக்கூடாது.

‘இறைவனுக்கு மாறுசெய்வதிலும், உறவை முறிப்பதிலும், தமக்கு உடமையில்லாத ஒன்றிலும் நேர்ச்சை செய்வது கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஸயீத்பின் முஸய்யப் (ரலி), அபூதாவூத்)

ஒரு காரியம் கை கூடுவதற்கு நேர்ச்சை செய்ய அனுமதியுண்டு. எனினும் நேர்ச்சை செய்வதினால் மட்டுமே ஒரு காரியம் நிறைவேறும் என்று நினைத்துவிடக் கூடாது. மேலும் நிறைவேறும் அந்த காரியம் நேர்த்திக்கடனால் மட்டுமே நிறைவேறாது. அதில் விதியும் சேர்ந்திருக்கிறது. விதியில் இல்லாத ஒன்றை நேர்த்திக்கடனால் கொண்டு வரமுடியாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

‘நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து செல்வம் வெளிக்கொணரப்படுகிறது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)

‘நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே அவனைக் கொண்டு செல்கிறது. அதன் மூலம் இறைவன் கஞ்சனிடமிருந்து செல்வத்தை வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக இப்போது வழங்கத் தொடங்கி விடுகிறான் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)

‘நேர்த்திக்கடன் விதியில் எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

நமது காரியம் நிறைவேறுவதற்கு நேர்த்திக்கடனையும் தாண்டி தொழுகையும், பிரார்த்தனையும் இருக்கிறது. இவ்விரண்டிலும் ஈடுபட்டு நமது தேவைகளை இறைவனிடம் கேட்டுப்பெறலாம்.

ஒருவேளை நேர்த்திக்கடன் செய்தால் அதில் நன்மையானவற்றை நிறைவேற்றிட வேண்டும். அதில் தேவையற்றதையும், வீணானவற்றையும், பாவமானவற்றையும் விலகிக் கொண்டு நேர்த்திக் கடனை முறித்துவிட வேண்டும். முறித்ததற்காக சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அது குறித்த இறைவனின் கூற்றையும், இறைத்தூதரின் கூற்றையும் இனி காண்போம்.

‘நேர்த்திக்கடனை முறித்ததின் பரிகாரம் சத்தியத்தை முறித்ததின் பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்:அபூதாவூத்)

‘உங்களின் சத்தியங்களில் வீணானவற்றுக்காக இறைவன் உங்களைத் தண்டிக்கமாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம் உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே.’ (திருக்குர்ஆன் 5:89)

நல்ல நேர்த்திக்கடன்களை நல்லவிதமாக நிறைவேற்றிட வேண்டும். மற்ற தேவையில்லாத நேர்த்திக்கடன்களை முறித்துவிட வேண்டும்.

(நம்பிக்கை தொடரும்)

Next Story