சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் வழிபாடு


சனிதோஷ நிவர்த்தி தரும் அனுமன் வழிபாடு
x
தினத்தந்தி 24 Dec 2019 12:35 PM GMT (Updated: 24 Dec 2019 12:35 PM GMT)

ராமாயணத்தில் இணையற்ற இடத்தை பிடித்தவர் அனுமன். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். சீதாதேவியால், ’சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகா விஷ்ணு எடுத்த அவதாரம் தான் ராம அவதாரம். அப்போது அவருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான், அனுமனாக அவதாரம் செய்தார். ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ராமர். இந்த பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. இதில், ஒவ்வொருவரும் தங்களது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும், பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தனர். ராமர், லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாகுவதை பார்த்து அனைவருக்கும் ஆசி வழங்கிக்கொண்டிருந்தனர்.

அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து, அவற்றின் மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ராமர் லட்சுமணனை வணங்கி, ‘‘பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.

“எங்கள் கடமையை நாங்கள் செய் கிறோம். அதுபோல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனை பிடித்து பாருங்கள்” என்றார் ராமர்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, “ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.

“சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க, நாங்கள் இலங்கை நோக்கி செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த சேதுபந்தன பணியை ராம சேவையாக ஏற்று தொண்டாற்றி கொண்டிருக்கிறோம். இந்த பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்.”

“ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாக சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம்?.”

“என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளன. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு இடம் தந்தால், அது பெரும் தண்டனைக்குரியதாகும். எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து, தங்கள் கடமையைச் செய்யுங்கள்”

அப்படிச் சொல்லிவிட்டு, அனுமன் தலை வணங்கி நின்றார். அவரின் தலை மீது ஏறி அமர்ந்துகொண்டார் சனீஸ்வரன். அதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனு மனுக்கு பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்க வேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூட சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவரது தலையில் இருந்து கீழே குதித்தார்.

“சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், “ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால், நானும் பாறைகளை சுமந்து, சேது பந்தனப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்” என்றார் சனீஸ்வரன்.

‘‘இல்லை.. இல்லை.. இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் அல்லவா?” என்றார் அனுமன்.

அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், “அனுமனே! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்பு கிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

“ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை, உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்” என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார்.

எனவே ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்.


விரதம் இருப்பது எப்படி?

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் பிரம்ம முகூர்த்த வேளையிலேயே குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு சாத்தியும் வணங்கலாம். அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால்தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே பருகி உபவாசம் இருக்க வேண்டும். மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும்.

நாடி ஜோதிடர் பாஸ்கர்

Next Story