விஷ்ணு ஆலயத்தில் அருளும் சிவலிங்கம்


விஷ்ணு ஆலயத்தில் அருளும் சிவலிங்கம்
x
தினத்தந்தி 17 March 2020 12:04 PM GMT (Updated: 17 March 2020 12:04 PM GMT)

இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் ஆகிய மும்மூர்த்திகளும் கூடிப் பேசி, புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அதுவே மகாவிஷ்ணுவின் ‘நரசிம்ம அவதாரம்.’

நரசிம்ம அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய திருத்தலமே ‘கோஷ்டியூர்’ எனும் ‘திருக்கோஷ்டியூர்’ ஆகும். மகாவிஷ்ணு தாம் எடுக்கப்போகும் நரசிம்ம அவதாரத்தை முன்கூட்டியே தேவர்களுக்கும், கதம்ப முனிவருக்கும் இத்தலத்தில் காட்டி அருளினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இந்திரன் முதலான தேவர்களும், கதம்ப முனிவரும், மற்ற கோலங் களையும் காட்டி அருளும்படி விஷ்ணுவிடம் கேட்டனர்.

அதன்படி நின்ற, இருந்த, கிடந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களையும் இங்கு காட்டியருளினார் மகாவிஷ்ணு. இந்த தலத்தின் மூலவர் ‘உரக மெல்லணையான்’ ஆவார். ‘உரகம்’ என்றால் ‘பாம்பு.’ ‘மெல்லணை’ என்றால் ‘மிருதுவான உடல் படுக்கை’ என்பதாகும். ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டதால், அவருக்கு இந்தத் திருநாமம் வழங்கப்படுகிறது. இவர் புஜங்க சயனத்தில் கிழக்கு பார்த்த வண்ணம் ஸ்ரீதேவி - பூதேவியுடன் அருள்கிறார். மது, கைடபர், இந்திரன், காசி மகாராஜா, புருரூப சக்கரவர்த்தி, கதம்ப முனிவர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் காட்சி தருகிறார்கள்.

சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் வீற்றிருக்கிறார். இத்தல ‘பிரார்த்தனை கண்ணன்’ எனும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வெகுவிரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நாக தோஷத்தினால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு கட்டும் மற்றும் வீடு வாங்கும் யோகம் தடைபட்டவர்களுக்கும் இத்தல தரிசனம் மிகச்சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது. இத்தல உற்சவர் சவும்ய நாராயணப் பெருமாள், வெள்ளியால் ஆனவர். இவர், தேவேந்திரனால் கதம்ப முனிவருக்கு அன்புடன் கொடுக்கப்பட்டவர்.

‘திருமாமகள்’ என்ற திருநாமத்துடன் தாயார் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோவிலின் கருவறை விமானம், அஷ்டாங்க விமானமாகும். ‘ஓம் நமோ நாராயணாய’ என்னும் அஷ்டாட்சர மந்திரத்தைக் கொண்டே இந்த விமானம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின் கீழ் தளத்தில் ருக்மணி - சத்யபாமாவுடன் நர்த்தன கிருஷ்ணர் உள்ளார். இவர் பூலோகப் பெருமாளாய் அருளாசி வழங்கி வருகிறார்.

அடுத்ததாக முதல் தளத்தில் சவும்ய நாராயணர் திருப்பாற்கடல் பெருமாளாய், பள்ளிகொண்ட கோலத்தில் அருள்செய் கிறார். இவருடன் ஸ்ரீதேவி -பூதேவி தாயாரும் உள்ளனர். இரண்டாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக உபேந்திர நாராயணர், தேவலோகப் பெருமாளாய் அருள்பாலித்து வருகிறார். மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி - பூதேவியுடன் பரமபத நாதர் வைகுண்ட பெருமாளாய் எழுந்தருளியுள்ளார்.

நரசிம்மர் இத்தலத்தில் இரண்யனை வதம் செய்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி ஆலயம் உள்ளே சென்றால், கரு வறையில் உரக மெல்லணையானை தரிசனம் செய்யலாம். இங்குள்ள தீர்த்தம் ‘தேவபுஷ்கரணி.' தல மரமாக பலா மரம் இருக்கிறது. கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது. இதனை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்கிறார்கள். எதிரில் நந்தியும் உள்ளது. அருகில் முருகப்பெருமான் மற்றும் நாகர் சிலைகளும் உள்ளது.

பெரியாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திரு மழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேச ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

திருக்கோஷ்டியூர் பகுதியில் நம்பி என்பவர் வாழ்ந்து வந்தார். வைகுண்டத்தில் திருமாலுக்குத் தொண்டு செய்யும் நித்யசூரிகளுள் ஒருவரான புண்டரீகர் தான், திருக்குருகைப் பிரான் எனும் திருக்கோஷ்டியூர் நம்பியாக வந்துதித்தார். அவரிடம் மந்திர உபதேசம் பெற எண்ணிய ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்தார். ஆனால் தன்னைக் காண வந்த ராமானுஜரை 17 முறை திருப்பி அனுப்பி விட்டார் நம்பி. இருப்பினும் மனம் தளராது 18-வது முறையும் நம்பியைக் காணவந்தார் ராமானுஜர்.

இதையடுத்து அவருக்கு ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. பின்னர் ‘இந்த மந்திரத்தை வெளியில் பிறருக்குச் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும்’ என்று கூறி ராமானுஜரை அனுப்பிவைத்தார். ஆனால் ராமானுஜர் உலக உயிர்கள் அனைத்தும் நாராயண மந்திரத்தைத் தெரிந்துகொண்டு, சகல வளங்களும் பெற்று வைகுண்டம் அடைய வேண்டும் என்பதற்காக, இத்தல விமானத்தில் நின்றுகொண்டு மக்களுக்கு ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்திரத்தையும், அதன் சிறப்புகளையும் உரக்கச் சொல்லி உபதேசித்தார்.

இதனால் கோபமுற்ற நம்பி, ராமானுஜரிடம் “நான் ரகசியமாய் உரைத்த மந்திரத்தை பிறர் அறியும் வண்ணம் உரக்க உபதேசித்தது ஏன்?” என வினவினார்.

அதற்கு ராமானுஜர், “அடியேனுக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை. மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுதான் அடியேனுக்கு வேண்டும்” என திருவாய் மலர்ந்தார்.

இதனைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த நம்பி, “நீர்! என்னிலும் பெரியவர்” என்றுகூறி கட்டித் தழுவி ‘எம்பெருமானார்’ எனும் பட்டத்தை ராமானுஜருக்கு வழங்கினார். இன்றும் ராமானுஜர் நின்று உபதேசித்த இடத்தில் ராமானுஜருக்கு சிலை உள்ளது. திருக்கோஷ்டியூர் நம்பிக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் நம்பியின் சன்னிதியில் அவரது திருவாராதன மூர்த்தியான சீதை, லட்சுமணன், அனுமன் சமேத ராமபிரானும் உள்ளனர்.பின்னாளில் திருக்கோஷ்டியூர் நம்பி தமது புதல்வி தேவகியையும், புதல்வன் தெற்காழ்வானையும் ராமானு ஜருக்குச் சீடர்களாக்கினார். இத்தல கோபுர உச்சியில் இருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பி வாழ்ந்த வீட்டினைக் காணலாம். இந்த வீடு ‘கல்திருமாளிகை’ என்று அழைக்கப்படுகிறது. நம்பியின் சந்ததியினர் இன்றும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள்.

அமைவிடம்

மதுரையில் இருந்து 61 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து 49 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.

விளக்கு பிரார்த்தனை

ஆண்டுதோறும் இத்திருத்தலத்தில் மாசி மாத மக நட்சத்திர நாளின் பவுர்ணமி திதி முடிவுறும் நேரத்தில், இரவு ‘தெப்ப விளக்குத் திருவிழா’ எனும் ‘வரந்தரும் விளக்கு எடுக்கும் விழா’ கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பெருமாளும், தாயாரும் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவார்கள். அந்த நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் மண் அகல்விளக்கு தீபமேற்றி வழிபாடு செய்வார்கள். இது சிறப்பான விளக்குப் பிரார்த்தனை பரிகாரமாகக் கூறப்படுகிறது. பிரார்த் தனை செய்பவர்கள், ஒரு அகல்விளக்கை ஆலயத்தில் வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். பின்னர் அந்த விளக்கில் ஒரு ரூபாய் காசும், துளசியும் போட்டு சிறுபெட்டியில் வைத்து மூடி பூஜை அறையில் வைத்து விடுகின்றனர். இந்த விளக்கில் திருக்கோஷ்டியூர் பெருமாள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் நமது நியாயமான பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அது எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அடுத்த ஆண்டு மாசி மகத்தன்று இரவு, இத்தல குளக்கரையில் நடைபெறும் தெப்ப விளக்குத் திருவிழாவின் போது தாங்கள் வீட்டில் வைத்து வழிபட்ட அகல்விளக்குடன் மற்றொரு விளக்கில் தீபமேற்றி தெப்பக் குளக்கரையில் வைத்து வழிபடுகின்றனர்.

மகாமக கிணறு

நவக்கோள்களில் ஒருவரான புதனின் புதல்வன் புருரூபன், அரச சக்கரவர்த்தியாக திகழ்ந்தவன். ஒருமுறை புருரூப சக்கரவர்த்தி திருக்கோஷ்டியூர் வந்தபோது, மாசி மகாமகம் வந்தது. மகா மகத்தன்று மகாவிஷ்ணுவை கங்கையில் நீராடி தரிசிக்க விரும்பினார் புருரூப சக்கரவர்த்தி. அவரது விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் திருக்கோஷ்டியூர் தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை நதி பொங்கிவர, அதன் மத்தியில் மகாவிஷ்ணு காட்சி தந்தார்.

தற்போதும் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் மாசி மக நட்சத்திர நாளில் இந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். எனவே மாசிமக நாளில் இத்தல மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

- சிவ.அ.விஜய் பெரியசுவாமி

Next Story