கிரகங்களின் செயல்பாட்டால் உருவாகும் வைரஸ்?


கிரகங்களின் செயல்பாட்டால் உருவாகும் வைரஸ்?
x
தினத்தந்தி 24 March 2020 9:31 AM GMT (Updated: 24 March 2020 9:31 AM GMT)

உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தி வரும் ஒரு வகை கடுமையான வைரஸ் நோய், ‘கொரோனா’. உலக மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் ஒரு நோய் எப்படி உருவாகிறது? அதற்கான ஜோதிட ரீதியான காரணம், விளக்கமே இந்த கட்டுரை.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நவக்கிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. அந்த வகையில் வருட கிரகங்களான ராகு-கேது, சனி மற்றும் குருப்பெயர்ச்சிக்கும், மாத கிரகமான செவ்வாயின் இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த ஐந்து கிரகங்களில் குருவை தவிர்த்து பிற நான்கு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் பெறும் போது, தாங்கள் நின்ற பாவகத்திற்கு ஏற்பவும், இணைந்த கிரகங்களின் வலிமைக்கு ஏற்பவும் பாதிப்பை தரும்.

ஒவ்வொரு ராகு-கேது பெயர்ச்சியிலும் சர்ப்ப கிரகங்கள் தாங்கள் நின்ற ராசியின் தன்மைக்கும், சுய வலிமைக்கும் ஏற்ப வரலாற்றில் இடம் பெறக்கூடிய சம்பவங்களை நடத்தி விட்டுதான் அடுத்த ராசிக்கு செல்லும். அதுவும் சுய சாரம் பெறும் சர்ப்ப கிரகங்கள் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள், கொடூர மான கோர தாண்டவமாகவே இருக்கும். உலக மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தும். உதாரணமாக உலக மக்களை சூறையாடிய சுனாமி, விமான கடத்தல், கும்பகோணம் தீ விபத்து, சிக்குன் குனியா போன்றவற்றை கூறலாம்.

கிரகங்களின் செயல்பாடுகள்

தற்போது கோச்சாரத்தில் கடந்த 2019-ல் மார்ச் மாதம் நடைபெற்ற ராகு-கேது பெயர்ச்சியில், ராகு பகவான் மிதுன ராசியிலும், கேது பகவான் தனுசு ராசியிலும் நுழைந்தார்கள். ராகு, தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்தி சிதைத்து விடும். கேது, அமைதியாக வேடிக்கை பார்த்து சிதைவிற்கு மருந்து போடுபவர்.

சிறிய விஷயத்தை பிரமாண்டப்படுத்தி, அது வருவதற்கு முன்பாகவே பீதி, வதந்திகளை பரப்பு வதில் ராகுவை யாரும் மிஞ்ச முடியாது. ராகு என்றாலே பீதி, வதந்தி. இனம் புரியாத அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய நோய், விஷக் கிருமி களால் கூட்டு மரணம், கொடூர விபத்து போன்றவற்றை ஆர்ப்பாட்டத்துடன் ஏற்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஒரே கிரகம், ராகு பகவான்.

ஆக கடுமையான நோய்தாக்கம், திடீர் கெட்ட விளைவு, அசம்பாவிதம், தாங்க முடியாத பிரச்சினை நடக்க வேண்டும் என்றாலோ அல்லது நடக்கும் என்றாலோ, அதற்கு அசுபர்களான சனி, செவ்வாய், ராகு தொடர்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

சனி பகவான், தான் நின்ற இடத்திற்கு ஏற்ப ராகு பகவானின் பணிக்கு உதவு பவர். சம்பவத்தை நிர்ணயித்து நடத்த ராகு விற்கு உறுதுணையாக இருப்பவர். சம்பவத்தால் ஏற்படக் கூடிய விளைவை நிர்ணயம் செய்யக்கூடிய கர்ம வினை அதிகாரி.

கால புருஷ அஷ்டமாதிபதியான செவ்வாய் பகவான், முரட்டுத்தனமான தீவிர செயல்களால் பிரச்சினைகளை அதிகப் படுத்துபவர். இது போன்ற கொடூர விளைவுகளில் செவ்வாயின் பங்கும் அளப்பரியது.

குருவின் பார்வைக்கு எல்லா பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. தற்போது கோச்சாரத்தில் மிதுனத்தில் நிற்கும் ராகு, திருவாதிரை நட்சத்திரத்தில் சுய சாரத்தில் இருக்கிறார். ராகு என்றால் விஷம். திருவாதிரை நட்சத்திரம் சுட்டிக்காட்டும் மனித உடல் உறுப்பு தொண்டை மற்றும் நுரையீரல். மிதுன ராசியின் அதிபதி புதன். மிதுனம் காற்று ராசி. உடலில் கழுத்து, தொண்டை பகுதியை குறிப்பது.

மனித உடலில் காற்று சுழலும் பகுதி, நுரையீரல். புதனின் வீடான மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு, மனித உடலில் சுவாச உறுப்புகளை பாதித்து, நுரையீரல் சார்ந்த நோய்களை உருவாக்குகிறது. அத்துடன் ராகுவை பொறுத்தவரை, மிதுன ராசி நட்பிற்கு காரக கிரகமான புதனின் வீடு என்பதால், கை குலுக்குதல், கட்டித் தழுவு தல் போன்றவற்றின் மூலமும் நோய் கிருமிகளை பரப்பி வருகிறது. புதனின் நிறம் பச்சை. வைரஸ் கிருமி நிறம் கூட பச்சைதான்.

கோச்சாரத்தில் கால புருஷ அஷ்டமாதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று, தனது எட்டாம் பார்வையால் ராகுவை பார்த்த போது மெதுவாக உற்பத்தியான இந்த நோய் கிருமிகள் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது சனியின் வீடான மகரத்தில் உச்சம் பெறப்போகும் செவ்வாய், நோய் தாக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது.

தனுசில் நின்ற குரு பகவானின் பார்வையால், ராகுவின் ஆரவாரம் கட்டுக்குள் இருந்தது. இனி குரு பகவான் அதிசாரத்தில் மகரத்திற்கு செல்வார். அப்படி சென்றாலும், தனது பார்வை பலத்தை மிதுனத்திற்கே தருவார். ஆனால் மகரம் குருவிற்கு நீச்ச வீடு. அதனால் உலக மக்களுக்கு, அசவுகரியங்கள் ஏற்படும் வாய்ப்பே அதிகம்.

மிதுனம், பள்ளி - கல்லூரிகளை குறிக்கும் இடம் என்பதால், ராகு தன் அசுர சக்தியால் பள்ளி-கல்லூரிகளை மூடச் செய்துவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, உளவியல் ரீதியாக வைரஸ் தாக்கத்திற்கு தீர்வு தேட முயன்றால், ‘மனிதனை கொல்வது நோயா? பயமா?’ என்ற கேள்வி எழும். அதில் பயத்திற்கே முதலிடம். பயம் மரணத்தை விட கொடியது. எனவே உங்கள் ஊரின் எல்லையில் உள்ள காவல் தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

கொரோனா வைரஸ்

வைரஸ் என்றால் ‘நோய் கிருமி’ என்று பொருள். வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்ற வருக்கு எளிதில் பரவக் கூடிய கிருமி. நோய் தாக்கப்பட்டவர்களுடன் கைக் குலுக்கினாலோ, அருகில் நின்று பேசினாலோ, தொட்டாலோ கூட எளிதில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவிவிடும். காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும். புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம் என்பதால், நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்வதே மிக கடினம். பல பரிசோதனைக்கு பிறகே நோயின் தாக்கத்தை பற்றி அறிய முடிகிறது.

இந்தியா கொரோனா வைரசால் பாதிக்கப்படுமா?

நமது பாரத இந்தியா தவசிகளும், ஞானிகளும், சித்தர்களும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கும் புனித பூமி. போகர், போதிதர்மன், அகத்தியர், காஞ்சி பெரியவர், சீரடி ஸ்ரீ சாய்பாபா போன்ற தவசிகளின் ஆசி நிறைந்த பூமி. அளவிட முடியாத நற்சக்திகள், புனித ஸ்தலங்கள் நிறைந்த புண்ணிய பூமி. வடக்கில் இமயமலை ஒரு கேடயமாகவும், மற்ற மூன்று புறங் களிலும் கடல் சூழ்ந்தும் இந்தியாவை காப்பாற்றுகின்றது. மேலும் உலக இயக்கத்திற்கு காரணமான சூரியனின் பரிபூரண ஆசி நிறைந்த பூமி நம் பாரதம்.

இந்தியாவில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு நோய் கிருமிகளை உருத்தெரியாமல் அழிக்கும் சக்தி உண்டு. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் தினமும் சூரிய நமஸ்காரம், சந்தியா வந்தனம் செய்யச் சொன்னார்கள். இந்தியாவில் மாசி, பங்குனி மாதத்தில் நடத்தப்படும் அம்மன் பண்டிகைகள், மிகக்குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் மாரியம்மன், காளியம்மன் மற்றும் காவல் எல்லை தெய்வ பண்டிகைகள் தொற்றுநோயை அண்ட விடாது.

வரும் முன் காப்பது எப்படி?

பிரச்சினையை தரும் பிரபஞ்சமே அதற்கான தீர்வையும் தந்திருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொண்டால் எந்த விதமான வைரஸ் வந்தாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கை பிரபஞ்சம் தந்த வரம் சூரியக் குளியல். தினமும் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது, 1 மணி நேரம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருக்க வேண்டும்.

நவக்கிரக சமித்துகளால் ஹோமம் நடத்த வேண்டும். ஹோமத்தில் செவ்வாயின் சமித்தான கருங்காலி, புதனின் சமித்தான நாயுருவி, குருவின் சமித்தான அரசு, ராகுவின் சமித்தான அருகு, கேதுவின் சமித்தான தர்ப்பை ஆகியவை கண்டிப்பாக இடம் பெறவேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள வைரஸ் கிருமிகள் எதுவாக இருந்தாலும் அழியும். ஹோமம் நடத்த இயலாதவர்கள் தினந்தோறும் குறிப்பிட்ட மூலிகை குச்சிகளை நெருப்பில் இட்டு ஹோமப் புகையை உற்பத்தி செய்து, வீட்டை சுத்தப்படுத்தலாம். மந்திரங்கள் மூலம் நல்ல அதிர்வலைகள் ஏற்படும். ஹோமப் புகையை சுவாசிக்கும் போது நுரையீரலை ஆக்கிரமிக்கும் நோய் கிருமிகள் உருவாகாது.

வீட்டின் உள் பகுதியில் சூரிய வெளிச்சம் படும்படி கதவு, ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்.

அசைவ உணவை இயன்றவரை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமைத்த சுத்தமான பச்சை காய்கறிகள் மற்றும் பழ வகைகளை சாப்பிட வேண்டும். நன்றாக சுத்தம் செய்த பாத்திரத்தைப் பயன்படுத்தி சமைக்க வேண்டும்.

கொதித்து ஆறிய சுத்தமான குடிநீரை பருக வேண்டும்.

தினமும் குளித்து விட்டு துவைத்த சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.

தேவையின்றி அடுத்த நபரை தொட்டு பேசுதல் கூடாது.

எச்சில் மற்றும் அடுத்த நபர் கைபட்ட உணவை உண்ணுதல் கூடாது.

பரிகாரம்

போகர் நவபாஷணத்தால் உருவாக்கிய பழனி மலை முருகன் சிலையை, வீட்டிலிருந்தே மனதார வழிபடவும்.

தலை வேறு, உடல் வேறு என்ற நிலையில் அசுர முகமும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, அசுர உடலும் பாம்பு முகமும் கொண்டவர் கேது. எனவே மனித முகம் இல்லாத தெய்வங்களை வழிபடலாம். விநாயகர், வராஹி, ஆஞ்சநேயர், சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடுங்கள்.

ஆஞ்சநேயர், கால பைரவருக்கு உளுந்து வடை மாலை சாற்றி வழிபடலாம்.

ஆடம்பரமாக பூஜை செய்து ராகுவையும், கீழ்படிந்து செய்யும் நடைமுறை பரிகாரங்களால் கேதுவையும் வணங்கலாம்.

மாரியம்மன் குறிப்பாக சமயபுரம் மாரியம்மன், திருவேற்காடு கருமாரி மற்றும் படவேடு ரேணுகாதேவி, பெரியபாளையம் பவானி அம்மன், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி போன்ற அம்மன்களை ராகு, கேது தோஷம் நீங்க மனதால் வேண்டலாம்.

கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் கருப்பு ஆடு, கருப்பு உளுந்து தானம் செய்யலாம். காளி, துர்க்கை, பிரத்யங்கிரா அம்மனுக்கு புடவை வாங்கிக் கொடுத்து, கருப்பு திராட்சை நிவேதனம் செய்யலாம்.

ராகு, காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சாரம் செய்வதால், பரிகாரங்கள் பாராயணம் செய்யும் மந்திர ஜபமாக இருப்பது மிகவும் நன்மை தரும். நாட்டு நலனுக்கு வீட்டு உறுப்பினர்கள் தினமும் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர அளவிட முடியாத நன்மை உண்டாகும்.

‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனது ஸஹ வீர்யம்

கரவாவஹை தேஜஸ்வி நாவதீதமஸ்து மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி’

ராகு - கேதுக்களின் தாக்கத்தை குறைக்க தினமும் திருக்கோளறு பதிகம் படிக்க வேண்டும்.

நோய் தாக்காமல் இருக்க, முக்கியமாக அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story