விதையும், விவிலியமும்...


விதையும், விவிலியமும்...
x
தினத்தந்தி 22 Jun 2021 12:39 PM GMT (Updated: 22 Jun 2021 12:39 PM GMT)

‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார்.

எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார். அப்படி இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார்.

“ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடியவில்லை. அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கிக் காய்ந்துபோயின. இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த நிலத்தில் விழுந்தன. ஆனால், அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. அவர் தூவிய மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தரத் தொடங்கின. அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன. நான் கூறிய உவமையைக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொன்னவர், சற்று இடைவெளிவிட்டு அந்தக் கதைக்கான உள்ளர்த்தத்தையும் எடுத்துரைத்தார்.

“பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோகத் தந்தையின் அரசாங்கத்தைப் பற்றிய இறைச் செய்தியைக் கேட்டும், அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், பொல்லாதவன் வந்து அவருடைய மனதில் விதைக்கப்பட்டவற்றைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். பாறைகளின் மேல் விழுந்த விதைகள் இறை வார்த்தைகளைக் கேட்டும், மனதில் அவற்றை ஆழமாகப் பதியவைத்துக்கொள்வதில்லை. முட்புதருக்கு இடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையால் அவ்வார்த்தைகளைத் தன்னுள் இருத்தி வைத்து அவற்றின்படி நடக்காதவனைக் குறிக்கிறது. எனவே, இறை வார்த்தை அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.

நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை இறை வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் 100 மடங்கும், சில சமயம் 60 மடங்கும், சில சமயம் 30 மடங்கும் பலன் தருகிறான்” என்று விளக்கினார்.

இவ்வாறு விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.

Next Story