வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக...


வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக...
x
தினத்தந்தி 2 Jan 2022 6:24 AM GMT (Updated: 2 Jan 2022 6:24 AM GMT)

ராம நாமம் எங்கெல்லாம் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் அனுமன் வாசம் செய்வதாக புராணங்கள் சொல்கின்றன. அதே போல, ஸ்ரீமன் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணுவின் பெருமை பேசப்படும் இடங்களில் எல்லாம் திருமகளான லட்சுமி தேவி வசிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் எங்கெங்கெல்லாம் லட்சுமி வாசம் செய்வாள், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

* விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லிக்கனிக்கு ‘ஹரி பழம்’ என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் உள்ளது. ஒருவரது வீட்டில் நெல்லி மரம் இருந்தால் அந்த வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். அங்கு லட்சுமியும் வாசம் செய்வாள். தீய சக்திகள் அந்த வீட்டை அணுகாது.

* மங்கலப் பொருட்களாக கருதப்படும், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், மாவிலைத் தோரணம், சுமங்கலி பெண்கள், பூரண கும்பம், திருமண், வாழை, வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் போன்றவற்றிலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

* வீட்டில் துளசி மாடம் வைத்திருப்பவர்கள், அதிகாலையில் நீராடிவிட்டு துளசி மாடம் முன்பாக தினமும் விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்து வணங்கினால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.

* வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க, வெள்ளை நிற புறாக்களை வளர்க்கலாம். சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோமியம், தாமரைப் பூ, ஆடைகளை தூய்மையாக வைத்திருப்பதும் லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும்.

* காலையில் கண்விழித்த எழுந்தவுடன் உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படத்தை பார்ப்பது, செல்வ வளம் சேர்க்கும். லட்சுமியின் அருளை வழங்கும்.

Next Story