நிறம் மாறும் சிவலிங்கம்


நிறம் மாறும் சிவலிங்கம்
x
தினத்தந்தி 28 Jan 2022 4:50 AM GMT (Updated: 28 Jan 2022 4:50 AM GMT)

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் என்ற இடத்தில் அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள ஒரு லிங்கம் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலை குடையாக இருக்க அதன் கீழ் அமைந்த இந்த சிவலிங்கம், ஒரு நாளில் மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு மாறுகிறது.

இந்த அதிசய நிகழ்வு, வருடத்தில் அனைத்து நாட்களும் நடைபெறுவதுதான் கூடுதல் சிறப்பு. காலை நேரத்தில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த சிவலிங்கம், நண்பகலில் காவி நிறத்தில் காட்சி தருகிறது. இரவில் இதன் நிறம் கருமையாக மாறி விடுகிறது. மறுநாள் காலை சிவலிங்கம் மீண்டும் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் கட்டப்பட்ட காலத்திலேயே இந்த சிவலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

அடி முடி காண முடியாதவர் சிவபெருமான் என்பதை உணர்த்தும் விதமாக, இந்த சிவலிங்கம், ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்கு கீழே புதையுண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. சிவபெருமான் பூலோகத்தில் கால் பதித்த ஒரே இடம் இதுதான் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது. இந்த ஆலயத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு, மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமையும் என்பதும் பெரும்பாலானவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Next Story