கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது


கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
x

சாம்பல் புதன்கிழமை தினத்தில் இருந்து 40 நாட்கள் உபவாசத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருப்பார்கள்.

கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்று. சிலுவையில் அறையப்பட்ட ஏசுகிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இது உயிர்ப்பு பெருவிழாவாகவும், உயிர்ந்தெழுந்த நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக ஏசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருப்பார்கள். அந்த நாட்கள் தவக்காலம், லெந்து நாட்கள், கஸ்தி நாட்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

அதன்படி, சாம்பல் புதன்கிழமை தினத்தில் இருந்து இந்த 40 நாட்கள் உபவாசத்தை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த சாம்பல் புதன் கிறிஸ்தவர்களால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. வழிபாடு நிறைவு பெற்றதும், ஆலயத்துக்கு வந்திருந்த மக்களுக்கு பாதிரியார்கள் நெற்றியில் சாம்பல் மூலம் சிலுவை அடையாளமிட்டனர். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தேவாலயங்களில் வழிபாடுகளும், அதிலும் குறிப்பாக இந்த 40 நாட்களுக்கு இடைப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாலையில் சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடத்தப்படும்.


Next Story